இந்தியாவின் விவசாய உற்பத்தித் துறை தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்து வரும் தற்போதைய சூழலில், நம் நாட்டின் உணவுப் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய பரவலாக்கப்பட்ட தானிய சேமிப்பு உள்கட்டமைப்பு மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் (PACS) மூலம் தானியச் சேமிப்பு, கொள்முதல் மற்றும் விநியோக முறைகளை மேம்படுத்தும் நோக்கத்தில் கூட்டுறவுத்துறையில் பரவலாக்கப்பட்ட தானிய சேமிப்புத் திட்டம் 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் வலுவான கூட்டுறவு அடிப்படையிலான சேமிப்புக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்!
சோதனை முறை மற்றும் விரிவாக்கம்: தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
திறன் அதிகரிப்பு: நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் புதிய சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு, சேமிப்புத் திறன் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
செயல்பாட்டுத் தரம்: சேமிப்புப் பணிகளில் வெளிப்படைத்தன்மை, உயர் தரம் மற்றும் சிறந்த செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றுக்கு இத்திட்டம் முதலிடம் அளிக்கிறது.
இந்தியாவின் தானிய சேமிப்பு முறையும் தேவையும்!
இந்தியாவின் தற்போதைய தானிய சேமிப்பு முறையானது பாரம்பரிய முறைகள், பரவலாக்கப்பட்ட உள்ளூர் அமைப்புகள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. மண் பானைகள் மற்றும் நிலத்தடியில் அமைக்கப்படும் சேமிப்புத் தொட்டிகள் போன்ற பாரம்பரிய முறைகளும் நவீன கிடங்குகளுடன் இணைந்து தொடர்கின்றன.
நம் நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதால், நவீன சேமிப்பு வசதிகளின் தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருவதால் இதனைத் தாங்கக்கூடிய வலுவான தானிய சேமிப்புக் கட்டமைப்பு அவசியமாகிறது.
மத்திய கூட்டுறவு அமைச்சகம் வலியுறுத்தல்!
உற்பத்தி மையங்களுக்கு அருகிலேயே சேமிப்பு வசதிகளை உருவாக்குவதன் மூலம் கொள்முதல் மையங்களுக்கு இடையேயான போக்குவரத்துச் செலவைக் கணிசமாகக் குறைக்கவும், உணவு தானியங்கள் வீணாவதைத் தவிர்க்கவும் முடியும் என்பதை மத்திய கூட்டுறவு அமைச்சகம் வலியுறுத்துகிறது.
அரசுத் திட்டங்களின் ஒருங்கிணைப்பு!
வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டம் மற்றும் வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்புத் திட்டம் போன்ற பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது. அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கத் தேவையான நிதி உதவியும், வட்டிச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. உணவு தானிய சேமிப்பு வசதிகளை ஏற்படுத்த மூலதன மானியமும், சிறு உணவுப் பதனப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்த சிறப்பு மானிய உதவிகளும் அளிக்கப்படுகின்றன.
கிராமப்புற பொருளாதாரத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பங்கு!
இந்தத் திட்டங்களின் ஒருங்கிணைப்பின் மூலமாக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் வெறும் சேமிப்புக் கிடங்குகளாக மட்டுமல்லாமல், முழுமையான ஒருங்கிணைந்த கிராமப்புற சேவை மையங்களாக உருவெடுத்து வருகின்றன. தனிப்பயன் வாடகை மையங்கள் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. நியாய விலைக் கடைகள் மூலம் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுவதுடன், பதபடுத்தப்பட்ட உணவுப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தானியங்களைச் சுத்தம் செய்தல் மற்றும் தரம் பிரித்தல் போன்ற பணிகள் மூலம் பொருட்களின் சந்தை மதிப்பு அதிகரிக்கிறது.
அரசு கொள்முதல்!
அரசு முகமைகளுக்காகத் தானியங்களைக் கொள்முதல் செய்யும் முக்கிய மையங்களாகவும் இக்கிடங்குகள் செயல்படுகின்றன. மாவட்ட கூட்டுறவு வளர்ச்சிக் குழுக்களால் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் முறையாக அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன. தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் (NCDC) இத்திட்டத்தை நேரடியாகச் செயல்படுத்துகிறது. தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பிரத்யேக ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு இப்பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மொத்தத்தில், இத்திட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
