ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் நிதி திரட்டுவது தொடர்பான திட்டத்தை விவாதிக்க சனிக்கிழமையன்று (செப்டம்பர் 5) இயக்குநர்கள் குழு கூட்டத்தை நடத்தவுள்ளது. இதனால் ஓலா எலெக்டிக் பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளன. பங்குச்சந்தைக்கு வழங்கப்பட்டுள்ள தகவலின்படி, பங்குதாரர்களின் ஒப்புதல் மற்றும் இதர சட்டப்பூர்வ அனுமதிகளுக்கு உட்பட்டு, தகுதியான நிறுவனங்கள் மூலமாக பங்குகளை வழங்குதல் (QIP), விருப்ப பங்கு வெளியீடு (Preferential issue) அல்லது தனியார் முறையிலான பங்களிப்பு போன்ற ஏற்பாடுகள் மூலம் நிதி திரட்டுவது குறித்து இந்த கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும்.
மேலும், மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டிற்கான ஆண்டு அறிக்கை மற்றும் வரவிருக்கும் ஆண்டு பொதுக்கூட்டம் (AGM) தொடர்பான விஷயங்களையும் இந்த வாரியக் கூட்டம் ஆராயும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், நிறுவனம் திரட்ட உத்தேசித்துள்ள தொகை எவ்வளவு என்பது குறித்தோ அல்லது அந்த நிதியின் பயன்பாடு குறித்தோ இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. கடந்த ஜூன் மாதத்தில் தகுதியான நிறுவனங்கள் மூலமான பங்களிப்பு (QIP) மூலம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ரூ. 780 கோடியை திரட்டியிருந்தது. அந்த நேரத்தில் ஒரு பங்கு ரூ. 35.86 என்ற விலையில் விற்கப்பட்டது. இது 2025ஆம் ஆண்டின் இறுதியில் அதிகபட்சமாக ரூ. 1,500 கோடி வரை நிதி திரட்ட பங்குதாரர்கள் அளித்த ஒப்புதலின் ஒரு பகுதியாகும்.
2024 ஆகஸ்ட் மாதம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், நடப்பு 2026 நிதியாண்டில் தனது இழப்புகளைக் குறைத்து லாப வரம்புகளை மேம்படுத்திய போதிலும், விற்பனை மற்றும் வருவாயில் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நேற்று, புதன்கிழமை வர்த்தக முடிவில் தேசிய பங்குச் சந்தையில் (NSE) இந்நிறுவனத்தின் பங்கு விலை ரூ. 38.98 ஆக நிறைவடைந்தது.
முன்னதாக, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான S1Z-க்கான முன்பதிவு தொடங்குவதாக ஓலா எலக்ட்ரிக் மோபிலிட்டி நிறுவனம் அறிவித்ததை அடுத்து, திங்கட்கிழமை வர்த்தக அமர்வில் அதன் பங்குகள் பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டன. திங்கட்கிழமையன்று தேசிய பங்குச் சந்தையில் அதன் பங்குகள் ஒரு பங்குக்கு ரூ. 41.3 என்ற உச்சத்தை எட்டியது. இது கிட்டத்தட்ட 6 சதவீத உயர்வாகும். கடந்த மார்ச் 16 அன்று பதிவான 52 வாரக் குறைந்தபட்ச விலையான 42.2 ரூபாயை விட இந்த பங்குகள் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. இருப்பினும், 12 மாத அடிப்படையில் பங்குகள் சரிந்தே காணப்படுவதுடன், -25 சதவீதம் எதிர்மறை வருமானத்தையே அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer:
பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இது ஒரு தகவல் மட்டுமே. இந்தப் பங்குகளில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை. பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது ரிஸ்க் நிறைந் தது. எனவே முதலீடு செய்வதற்கு முன் சரியான ஆலோசனை தேவை.
