வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI) வெளிநாட்டு நாணய முதலீடுகளை ஈர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கிய ஒரு திட்டத்தின் மூலம் திரட்டப்பட்ட தொகை 100 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதன் பெரும் வெற்றியைக் கருத்தில் கொண்டு, அத்திட்டத்தை திட்டமிட்டதை விட ஒரு மாதம் முன்னதாகவே முடிக்க அரசு முடிவு செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலையில் ஏற்றத்தாழ்வு மற்றும் சரிந்து வரும் இந்திய ரூபாயை ஆதரிப்பது போன்ற காரணங்களால் நம் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு சரிந்து வந்த காலகட்டத்தில் என்.ஆர்.ஐ மக்களிடமிருந்து வந்த இந்த பெருமளவிலான டாலர் வரத்து இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை சாதனை அளவான 729.3 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் வெளிநாட்டு நாணய வெளிநாடு வாழ் இந்தியர் (வங்கி) (FCNR(B)) திட்டத்தைத் தொடங்கியது. ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் இது 100 பில்லியன் டாலர் மதிப்பைத் தாண்டியுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இத்திட்டத்தின் மூலம் சுமார் 80 பில்லியன் டாலர்கள் ஈர்க்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தார். அதிகப்படியான மூலதன வரத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றிய கவலைகளுக்கு மத்தியில், செப்டம்பர் 30ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்ட அசல் காலக்கெடுவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே FCNR(B) சாளரத்தை ரிசர்வ் வங்கி மூடியது. திங்கள்கிழமையுடன் FCNR(B) சாளரம் மூடப்பட்டாலும், செப்டம்பர் 11 வரை ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட டெபாசிட்டுகளுக்கு வங்கிகள் ஸ்வாப் (swap) வசதியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணி கையிருப்பானது தொடர்ந்து உயர்ந்த எண்ணெய் விலையின் அழுத்தத்தை எதிர்கொண்டு வரும் இந்திய ரூபாய்க்கு (INR) ஆதரவளிக்கவும், நாணய சந்தையில் தலையிடவும் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது. தற்போது நடந்து வரும் அமெரிக்க-ஈரான் போர் மற்றும் அதன் விளைவாக உலகளாவிய எரிசக்தி விலை உயர்வு ஆகியவற்றால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பும் அதன் நாணயமும் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள நேரத்தில் இது வந்துள்ளது.
பிப்ரவரி மாதம் போர் வெடித்ததில் இருந்து நம் நாடு 46 பில்லியன் டாலர் கையிருப்பை இழந்துவிட்டதாகவும், ஜூலை 24 நிலவரப்படி மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு 682 பில்லியன் டாலராக இருப்பதாகவும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் செய்தி வெளியானது. அமெரிக்க டாலருக்கு எதிராக 6 சதவீதம் பலவீனமடைந்திருந்த ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் நாணயங்களில் இந்திய ரூபாயும் ஒன்றாகும் என்றும் செய்தி ஒன்று வெளியானது. ஆனால் செப்டம்பர் மாத நிலவரப்படி அந்த நிலைமை மாறிவிட்டது. FCNR(B) போன்ற ரிசர்வ் வங்கியின் திட்டங்கள் மூலம், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு இப்போது 729.3 பில்லியன் டாலராக உள்ளது.
இந்த கையிருப்பு ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தவும் ரிசர்வ் வங்கிக்கு அனுமதி அளித்துள்ளது. செவ்வாய்க்கிழமையன்று இந்திய ரூபாய் 0.4% வரை அதிகரித்து டாலருக்கு எதிராக 94.7988 ஆக உயர்ந்தது. இது ஜூலை 1ஆம் தேதிக்குப் பிறகு மிக உயர்ந்த நிலையாகும்.
FCNR(B) திட்டம் என்றால் என்ன?
வெளிநாட்டு நாணய வெளிநாடு வாழ் இந்தியர் வங்கி (Foreign Currency Non-Resident (Bank) அல்லது FCNR(B)) என்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் வெளிநாட்டில் ஈட்டும் தொகையை இந்திய ரூபாயாக மாற்றாமல் அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு நாணயங்களாகவே இந்தியாவில் டெபாசிட் செய்ய அனுமதிக்கும் ஒரு திட்டமாகும். FCNR(B) திட்டத்தின் கீழ் உள்ள டெபாசிட்டுகள் நிலையான கால கணக்குகளாகும். மேலும் அசல் மற்றும் வட்டி இரண்டும் வெளிநாட்டு நாணயத்திலேயே செலுத்தப்படுவதால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவினால் ஏற்படும் இழப்புகளிலிருந்து டெபாசிட்டுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் FCNR(B) முதலீடுகள் 7 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்ததிலிருந்து 946 மில்லியன் டாலராக கடுமையாகச் சரிந்ததை அடுத்து, இந்த டெபாசிட்டுகளை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற ரிசர்வ் வங்கி தலையிட்டது. இந்தப் போக்கை மாற்றுவதற்காக ரிசர்ப் வங்கி ஜூன் மாதத்தில் செப்டம்பர் 30 வரை சலுகைகளுடன் கூடிய ஸ்வாப் (swap) வசதியை அறிவித்தது. இதன் மூலம் வழக்கமாக வங்கிகளால் ஏற்கப்படும் புதிய FCNR(B) டெபாசிட்டுகளுக்கான அந்நியச் செலாவணி ஹெட்ஜிங் (hedging) செலவுகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டது. இந்த டெபாசிட்டுகளின் காலம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
எதிர்பார்த்ததை விட இந்தத் திட்டத்திற்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஜூன் மாதத்திலிருந்து 40.8 பில்லியன் டாலர் நம் நாட்டிற்குள் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தது. FCNR(B) மூலம் வந்த மூலதன வரத்து ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 100 பில்லியன் டாலரைக் தாண்டியுள்ளது. பொருளாதாரம் ஒரு பலவீனமான கட்டத்தில் இருக்கும்போது ரிசர்வ் வங்கி வெளிநாடு வாழ் இந்தியர்களின் பணத்தை நாடியது இது முதல் முறையல்ல. இந்தியா கடுமையான செலுத்துதல் சமநிலை (balance-of-payments) நெருக்கடியை எதிர்கொண்ட 1991ஆம் ஆண்டில் இது முதன்முதலில் நிகழ்ந்தது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் நாணயக் கொள்கை மாற்றத்தால் ஏற்பட்ட மூலதன வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்த இந்தியா தனது வெளிநாடு வாழ் மக்களிடமிருந்து சுமார் 34 பில்லியன் டாலர்களைத் திரட்டிய 2013ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கை மீண்டும் புத்துயிர் பெற்றது. இந்நிலையில், FCNR(B) மூலமான டாலர் வரத்து அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கிறது. ரூபாயை ஆதரிக்க ரிசர்வ் வங்கிக்கு அதிக இடமளிக்கிறது. FCNR(B) வரத்து அதிகரித்ததன் மூலம் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமாக பலப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 21 நிலவரப்படி சாதனை அளவான 729.3 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இதே கையிருப்பு ஜூலை 24 நிலவரப்படி 682 பில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
