‘கருப்பு’ படத்தில் சூர்யாவுக்கு அதிரடி ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். அந்தப் படத்தைத் தாண்டி, தனுஷின் ‘ஓம்’, ‘தமிழ் முருகன்’, அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’, சூர்யாவின் 48-வது படம், பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் படம், ஆகஸ்ட் மாதத்தில் அவருடைய அடுத்த சுயாதீன பாடல் என அடுத்தடுத்து லைன்அப்புகளை கையில் வைத்திருக்கிறார்.

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு, சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் ‘ஓம்’ படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகிறது. இப்படி அடுத்தடுத்து பிஸியாக இயங்கி கொண்டிருக்கிறார் சாய் அபயங்கர்.
‘கருப்பு’ படத்தில் சூர்யா கதாபாத்திரத்தின் இன்ட்ரோ காட்சியில் மந்திர வடிவில் பாடலொன்று வரும். படம் வெளிவந்த சமயத்தில், அக்குறிப்பிட்ட பகுதி ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக, அர்ச்சகர் ஒருவர் மந்திரம் சொல்லும் காணொளி ஒன்றைப் பதிவிட்டு, ‘இதனை அப்படியே எடுத்து வைத்துதான் ‘கருப்பு’ படத்தில் வரும் அந்தக் குறிப்பிட்ட பின்னணி இசையை சாய் அபயங்கர் அமைத்திருக்கிறார்’ என விமர்சனம் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்குத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சாய் அபயங்கர். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் அந்தக் குறிப்பிட்ட பகுதி, தன்னுடைய ஸ்டுடியோவில் ரெக்கார்ட் செய்யப்பட்டது எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
கடவுள் மந்திர வரிகளைக் கொண்டு அந்தக் குறிப்பிட்ட பகுதியைக் காசியைச் சேர்ந்த அர்ச்சகர் அனந்த நாராயணனை வைத்துச் சாய் அபயங்கர் ரெக்கார்ட் செய்திருக்கிறார். அந்த மந்திரத்தின் உச்சரிப்பு சரியாக வர வேண்டும் என்பதற்காகக் காசியைச் சேர்ந்த அர்ச்சகரை இங்கு வரவழைத்து ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள்.
