Sivanmalai: சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் 3 தேங்காய்கள் வைத்து பூஜை! எல் நினோ தாக்கமா?

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சாமி கோயிலின் உத்தரவு பெட்டியில் 3 தேங்காய்களை வைத்து வழிபாடு நடத்த உத்தரவு கிடைத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில் விநோத வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த மலைக் கோயிலில் எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, இக்கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.

பக்தர்களின் கனவில் முருகன் வந்து குறிப்பிட்ட பொருளை வைத்து வழிபட வேண்டும் என சொல்வார். அதை கேட்டுவிட்டு சிவன்மலைக்கு வந்து பக்தர்கள் பூசாரியிடம் சொல்வார்கள். அப்போது பூசாரி அந்த பக்தர்கள் சொல்வது உண்மையா பொய்யா என்பதை பூ போட்டு பார்ப்பார்.

ஒரு வேளை உண்மையாக இருந்தால் ஏற்கெனவே வழிபட்டு வரும் பொருளை கண்ணாடி பேழையில் இருந்து எடுத்துவிட்டு பக்தர்கள் சொல்லும் புதிய பொருளை வைப்பார்கள். இதனால் தான், இது ‘ஆண்டவன் உத்தரவு’ என்றும் அழைக்கப்படுகிறது’.

அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் பிள்ளையார், அருகம்புல், எலுமிச்சைப் பழம், வெற்றிலை பாக்கு நேற்று மாற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியைச் சேர்ந்த இரும்புக் கடை வியாபாரியான சேர்மராஜா (50) முருகன் கோயிலுக்கு வந்தார். அவர் கோயில் நிர்வாகிகளிடம் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் 3 தேங்காய்கள் வைத்து வழிபட வேண்டும் என முருகப்பெருமான் கனவில் வந்து சொன்னதாக தெரிவித்தார்.

இதையடுத்து கோயிலின் அர்ச்சகர், சேர்மராஜா சொன்னது உண்மைதானா என்பதை பூ போட்டு பார்த்தனர். அது உண்மை என உத்தரவு வந்ததும், உடனே மஞ்சள் பிள்ளையார் மாற்றப்பட்டு 3 தேங்காய்கள் வைக்கப்பட்டன.

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தாக்கம் ஏற்படும். அந்த வகையில் தேங்காய்களை வைத்து வழிபடச் சொன்னதால் தென்னை விவசாயம் செழிப்படையுமா? தேங்காய்க்கு லாபம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போல் தேங்காய் மகசூல் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெய்யின் தேவையும் அதிகரிக்கும். தேங்காய் உற்பத்தியில் விவசாயிகளுக்கு மகிழத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அடுத்த ஆண்டு 2027-ல் எல் நினோ ஆண்டு ஏற்பட போகிறது. இந்த வறட்சியால் தென்னை விவசாயம் பாதிக்கப்படும் என்கிறார்கள். தேங்காயும் பெரிய அளவில் இருக்காமல் சுருங்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தேங்காய் மகசூல் குறையும், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. பொதுவாக தென்னையில் பூ வைத்து காய் காய்ப்பது மழைப்பொழிவை பொருத்தது. வறட்சியால் தென்னையில் பூ, காய் வைக்குமா என்பது 2028 ஆம் ஆண்டுதான் தெரியவரும். எனவே அந்த ஆண்டு தேங்காய் உற்பத்தி குறையும் என்கிறார்கள்.

எனவே ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தேங்காய்கள் வைக்கப்பட்டுள்ளதற்கு, எல் நினோவால் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதை பொருள் கொள்வதா? இல்லை எல் நினோவால் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் தேங்காய் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பதை குறிக்கிறதா என தெரியவில்லை.