தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த வாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலுரை அளித்தார்.
அவரது பதிலுரையில் திமுகவின் ஊழல் விவகாரங்கள் குறித்து முதல்வர்விஜய்பேசியதால், சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
“பஞ்சமி நிலங்களை மீட்க விரைவில் ஆணையம்”
தொடர்ந்து சமூக நீதி மற்றும் நலத்துறை அமைச்சர் வன்னியரசு எழுந்து பேசினார். அப்போது, “ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்பதற்கும், கண்டறிவதற்கும் விரைவில் ஆணையம் அமைக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர் வன்னியரசு, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த த்ரௌஹ்மான் கீர் என்பவர் முதன்முதலில் நிலமற்ற தலித்துகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கான பஞ்சமி நிலங்களை கண்டறிந்ததாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் அப்போதைய இங்கிலாந்து ராணிக்கு கடிதம் எழுதியதாகவும், அதன் அடிப்படையில் இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அந்த அரசாணைகளின் மூலம் 12 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் ஆதிதிராவிடர் மக்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய நிலமாக அறிவிக்கப்பட்டதாகவும், இதன் அடிப்படையில்தான் ஆதிதிராவிடர்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“பல முறை குழுக்கள் அமைக்கப்பட்டும் நிலை மாறவில்லை”
கடந்த திராவிட ஆட்சிகளில் பஞ்சமி நில விவகாரத்தை கையில் எடுத்து எத்தனை முறை ஆணையங்கள் அமைக்கப்பட்டன என்பது குறித்தும் அமைச்சர் வன்னியரசு குறிப்பிட்டார். மேலும், கடந்த2015ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஒரு தீர்ப்பு வெளியானதாகவும், அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் பஞ்சமி நிலங்களை கண்டறிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
“காலங்காலமாக குழுக்கள் நியமிக்கப்பட்டபோதும், நிலம் இழந்த தலித்துகளின் நிலை மாறவே இல்லை” என அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.
“அம்மாவின் பெயரை சொல்லி அழைக்கிறார்”..
அமைச்சர் வன்னியரசு பேசியபோது குறுக்கிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அமைச்சர் பெயரை குறிப்பிட்டு அழைத்ததாக எதிர்ப்பு தெரிவித்தார். “எல்லோரையும் முன்னாள் முதலமைச்சர்,முன்னாள் முதலமைச்சர் என்கிறோம். ஆனால் அமைச்சர் வன்னியரசு அம்மாவின் பெயரை சொல்லி அழைக்கிறார். பல காலமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று அழைப்பதுதான் வழக்கம்” என அவர் தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே ஒருமுறை முன்னாள் முதலமைச்சர் கலைஞரை ‘கருணாநிதி’ என குறிப்பிட்டதற்கு முதல்வரே மன்னிப்பு கேட்டு, அதை திருத்தியதாகவும் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டார். “தற்போது அமைச்சர் வன்னியரசு இரண்டு முறை அம்மாவின் பெயரை உச்சரித்துவிட்டார். பேரவைத் தலைவரே, நீங்கள் தான் அதை பார்த்துக்கொள்ள வேண்டும்” என எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
பரந்தூர் விமான நிலைய விவகாரம்…முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
“நான் குறைத்து மதிப்பிடவில்லை”
இதற்கு பதிலளித்த அமைச்சர் வன்னியரசு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தான் குறைத்து மதிப்பிடவில்லை என தெரிவித்தார். “சட்டப்பேரவை குறிப்பில்‘அம்மையார்’,‘அம்மா’ என எங்குமே இல்லை. அவைக் குறிப்பில் இருந்ததைத்தான் நான் வாசித்தேன்” என அமைச்சர் வன்னியரசு விளக்கம் அளித்தார்.
Source link
