சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் விஜய், திமுகவைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் பேசியிருந்தார். குறிப்பாக மிசா குறித்து பேசும்போது ஸ்டாலினை மறைமுகமாகச் சைகை ஒன்றின் மூலம் சாடியிருந்தார்.
இதற்கு எதிர்ப்புகள் கிளம்ப முதல்வர் விஜய், “பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரின் சட்டமன்றப் பதிலுரைக் குறித்து வீடியோ ஒன்றைப் பேசி வெளியிட்டிருக்கிறார். அதில், “அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத்தில் நடந்த சில சர்ச்சைகள் தமிழ் மக்களுக்கும் நம் உடன் பிறப்புகளுக்கும் கோபத்தையும், அதிருப்தியையும் உண்டாக்கி இருப்பதைப் நான் உணர்கிறேன்.
இந்தச் சர்ச்சையில் குறிப்பாக சிறை வரலாறும் இருப்பதால் அதைப் பற்றி நான் கொஞ்சம் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். தம்பி விஜய் நீங்கள் சொல்வது உண்மைதான். பொய்யெல்லாம் இல்லை.
எமெர்ஜென்சி காலத்தில் அதை எதிர்த்து கலைஞர் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டி மிசா சட்டத்தைக் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து அப்போது இருந்த ஒன்றிய அரசாங்கம் 1971-ம் ஆண்டு திமுக ஆட்சியைக் கலைத்தார்கள்.
ஆட்சியைக் கலைத்த அடுத்த நொடி மிசா சட்டத்தில் என்னைக் கைது செய்வதற்காக வீட்டிற்கு போலீஸ் வந்தார்கள். அன்று நான் வீட்டில் இல்லை. ‘மகன் பிரசாரத்திற்குச் சென்றிருக்கிறார் வந்ததும் நானே அனுப்பி விடுகிறேன்’ என்று கலைஞர் சொல்லி அனுப்பிவிட்டார்.
அடுத்த நாள் நான் வீட்டிற்குச் சென்றதும் அவரே போலீஸை வரச்சொல்லி கைது செய்ய சொல்லிவிட்டார். சிறையில் எனக்கு பல கொடுமைகள் நடந்தன. பத்து பேரை ஒரு சிறிய அறைக்குள் அடைத்து வைத்தார்கள். ஒரு பானை இருக்கும் அதில்தான் அத்தனை பேரும் சிறுநீர் கழிக்க வேண்டும்.

அந்த இடமே மிகவும் துர்நாற்றமாக இருக்கும். அங்குதான் நாங்கள் தூங்க வேண்டும். இரவில் தூங்க விடாமல் போலீஸ் லத்தியால் அடிப்பார்கள். காலால் மிதிப்பார்கள், மறுபுறம் ஆயுள் கைதிகளை வைத்து எங்களைக் கொடூரமாக அடிப்பார்கள்.
அவர்கள் அடித்ததில் எனது அருமை அண்ணன், நாடாளுமன்ற உறுபினர் சிட்டிபாபு சிறையில் இறந்து போனார். அவர்கள் அடித்ததில் என் தாடை எலும்புகள் எல்லாம் உடைந்துவிட்டது. நீங்கள் (விஜய்) கூட கையை வைத்து தாடையைக் காண்பித்தீர்கள் அல்லவா? அது கரெக்ட்தான். இன்னும் நான் அடிவாங்கிய தழும்புகள் இருக்கின்றன.
நான் இல்லை என்று சொல்லவில்லை பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு, முக்கியமாக தமிழர்களுக்காகப் போராடும் நிறைய பேருக்கு இந்த மாதிரி அடக்குமுறை நடந்துள்ளது. போராளிகள் எல்லாம் இதைத் தாண்டிதான் வந்துள்ளோம். யார் என்னைக் கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்றவே முடியாது. சட்டமன்றத்தில் எனது போராட்ட வரலாறு இருக்கும். அதைப் படித்து பாருங்கள் உண்மை என்னவென்று தெரியும்.
தவிர சர்க்காரியா கமிஷன் பற்றியும், எங்கள் தலைவர் கலைஞர் பற்றியும் தவறான கருத்துக்களைப் பேசியிருக்கிறீர்கள். ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய 95% வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் குற்றம்சாட்டப்பட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
பெரும்பாலும் அரசியல் பழிவாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுவது இங்கு உள்ள எல்லாருக்குமே தெரியும். தமிழ்நாடு சட்டசபைக்கென்று ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது. முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு சட்டசபையில் தேவையில்லாத சர்ச்சைகளைப் பேச வேண்டாம்.
தேர்தல் முடிந்ததும் நீங்கள் என் வீட்டிற்கு வந்தீர்கள். உங்கள் கரம் பிடித்து வரவேற்றேன். அப்போது நீங்கள் ‘பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்ததற்கு சாரி என்று என்னிடம் கூறினீர்கள்?’ நான், ‘பரவாயில்லை தம்பி. நீங்கள் இப்போது மாநிலத்தின் முதலமைச்சர். யாரைப்பற்றியும் பேசும்போது கண்ணியத்தோடு பேசுங்கள்’ என்று சொன்னேன். அதையெல்லாம் மறந்துவிட்டீர்களே.

திரும்பவும் சொல்கிறேன் ஒரு முதல்வருக்கான உடல்மொழியுடன் உங்கள் வார்த்தைகளும், பேச்சுகளும் கண்ணியத்துடன் இருக்க வேண்டும். நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணம் அதை மறந்துவிடாதீர்கள். ஆட்சி நிர்வாகத்தை சினிமா சூட்டிங் மாதிரி நடத்துகிறீர்கள். உங்களின் திறனற்ற நிர்வாகத்தை மறைக்க விதவிதமாக ரீல்ஸ் போடுகிறீர்கள்.
விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருகிறீர்கள். சட்டம் ஒழுங்கு படுகுழியில் இருக்கிறது. விவசாய கடன் தள்ளுபடியும் சரியாகச் செய்யவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறீர்கள். மாற்றம் வேண்டும் வாக்களித்த இளைஞர்கள் இது சரியான மாற்றமா? என்பதைக் கவனியுங்கள். வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை திமுகவினர் கைவிட்டு விடக்கூடாது. ஆட்சி இழப்பதை திமுக என்றும் தோல்வியாக நினைத்ததில்லை” என்று பேசியிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? pic.twitter.com/kzpwXi14L8
— M.K.Stalin (@mkstalin) September 10, 2026
