சென்னை: தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பின் அணைகள், பாசன ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து, கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள், 14 ஆயிரத்து, 141 பாசன ஏரிகள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும், தென்மேற்கு பருவமழை குறைந்து வருகிறது. இதனால், அங்குள்ள அணைகள், பாசன ஏரிகள் நிரம்பாமல் உள்ளன.
தமிழகத்தில் உள்ள 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி., ஆகும். தற்போது இவற்றில், 71.2 டி.எம்.சி., நீர் மட்டுமே உள்ளது. இது அணைகளின் மொத்த கொள்ளளவில், 31.7 சதவீதம். பல அணைகள் துார் வாரப்படாமல் கொள்ளளவு பாதிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் சேறும் சகதியுடன் சொற்ப அளவில் தான் நீர் உள்ளது. பாசன ஏரிகளில், 3,483 ஏரிகள் ஏற்கனவே வறண்டு விட்டன. மேலும், 6,127 ஏரிகள் வறண்டு விடும் கட்டத்தை நெருங்கி வருகின்றன. மழை குறைந்தால், தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதுகுறித்து, நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வறட்சி 2016 – 17ம் ஆண்டுகளில் ஏற்பட்டது. பல மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
தற்போது, அதே நிலையை நோக்கி, தமிழகம் செல்கிறது. ‘எல் நினோ’ எனும் காலநிலை மாற்றத்தால், அரியலுார், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலுார், ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்துார், வேலுார், விருதுநகர் மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்படலாம் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
அதற்கேற்ப அங்குள்ள அணைகள், பாசன ஏரிகளில் நீர்இருப்பு குறைந்து வருகிறது. மேய்ச்சல் நிலங்களும் காய்ந்து கிடப்பதால், கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
