வாஷிங்டன் டி.சி.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.
எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் கடந்த வாரம் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், நீடித்த பொருளாதார நெருக்கடி நீடிக்கும் என அமெரிக்கா தெரிவித்தது. இதனால், மேற்காசிய பகுதியில் மீண்டும் பதற்றம் கூடியுள்ளது.
ஈரான் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அப்படியில்லாமல் அதிருப்தி ஏற்படும் வகையிலான வழியை தேர்ந்தெடுக்கும் என்றால், அவர்களை முற்றுகையிடுவதுடன், உள்கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது குண்டுகள் வீசி தாக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிப்பும் வெளியிட்டார்.
எனினும், ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரான் முன்பே வரையறுத்துள்ள வழியின் மூலம் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என்றும் ஈரானின் துறைமுகங்களை முடக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை தொடர்ந்து நீடிக்கும் என்றால், அதற்கு பதிலடி நடவடிக்கைகளை எடுக்போம் என ஈரான் எச்சரித்து உள்ளது.
ஹார்மூஸ் ஜலசந்தியின் பாதுகாவலர் நாங்களே என்றும் அதனை கடந்து செல்லும் அனைத்து கப்பல்களும் தங்களுடைய முன் அனுமதியை பெற வேண்டும் என்றும், நாடுகளின் கப்பல்கள் அங்கீகரிக்கப்பட்ட ஈரானிய வழிகளிலேயே செல்ல அனுமதிக்கப்படும் என்றும் ராணுவ கப்பல்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பு படை இன்று வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், அமெரிக்காவின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் யு.எஸ்.எஸ். மைக்கேல் மர்பி என்ற கப்பல் அரபி கடலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், ஈரானின் துறைமுகங்களின் உள்ளே நுழைய அல்லது வெளியேற முயற்சிக்கும் கப்பல்களை அமெரிக்க கடற்படை தடுத்து வருகிறது. இந்த முற்றுகையை தொடர்ந்து, அமெரிக்க படைகளின் உத்தரவை ஏற்று 21 கப்பல் திரும்பி ஈரானுக்கே சென்றுள்ளன என தெரிவித்து உள்ளது.
