மும்பை: வாரணாசியிலிருந்து மும்பை நோக்கிச் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தை இயக்கவிருந்த விமானி திடீரென உடல்நிலை சரியில்லை என விடுமுறை எடுத்ததால், அந்த விமானம் 3 மணி நேரம் தாமதம் ஆனது.
வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு இண்டிகோ விமானத்தை இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விமானம் சரியான நேரத்தில் புறப்படாமல் தாமதம் ஆனது. விமான நிலையத்தில் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த விமானத்தை இயக்க நியமிக்கப்பட்ட விமானி திடீரென உடல்நிலை சரியில்லை என்று விடுமுறை எடுத்ததால் இந்த தாமதம் ஏற்பட்டது என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாரணாசி விமான நிலையம் இண்டிகோ நிறுவனத்தின் முக்கிய தளமாக இல்லாததால், அகமதாபாத்தில் இருந்து மாற்று விமானி வரவழைக்கப்பட்டார். இதற்கான கூடுதல் நேரம் தேவைப்பட்டதே இந்தத் தாமதத்திற்குக் காரணமாகும்; இந்த விமானம், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுப் புதிய விமானி வந்தவுடன் பத்திரமாக மும்பை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்ததால், சிறிது தாமதம் ஏற்பட்டது. விமானத் தாமதத்தின் போது காத்திருந்த பயணிகளுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது, பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என இண்டிகோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
