“இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன?”

மதுரை மாநகர் கூடல் நகர் வானவில் நகர் பகுதியைச் சேர்ந்த மகன் தமிழ்ச்செல்வன் என்ற 11ஆம் வகுப்பு மாணவன், செல்லூர் அருகே உள்ள கண்மாயில் மர்மமான முறையில் சடலமாக கிடந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்ச் செலவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வலது முழங்கை மற்றும் முட்டியில் காயங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தமிழ்ச்செல்வனும், அவரது வீட்டின் அருகே வசித்து வந்த 10ஆம் வகுப்பு மாணவியும் பழகி வந்ததாகவும், இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்கு மாணவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தமிழ்ச்செல்வனை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே தமிழ்ச்செல்வன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கும் அவரது குடும்பத்தினர், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11ஆம் வகுப்பு மாணவன் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது. மாணவனின் மரணம் தொடர்பாக சமரசமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Source link