வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளத்தின் சார்பில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதனால் பொதுத்துறை, தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடாச்சலம், “வங்கி ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் வேலை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும். விடுமுறைக்கு ஈடாக திங்கள் முதல் வெள்ளி வரையிலான வேலை நாட்களில் தினமும் 40 நிமிடங்கள் கூடுதலாகப் பணியாற்ற வங்கி ஊழியர்கள் தயாராக உள்ளனர். உலகம் முழுவதும் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள மத்திய, மாநில அரசுத் துறைகள், ரிசர்வ் வங்கி, எல்.ஐ.சி மற்றும் தனியார் நிறுவனங்களிலும் 5 நாள் வேலை கலாச்சாரமே நடைமுறையில் உள்ளது.
வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் கூடுதலாக வேலை செய்ய ஒப்புக்கொண்டபோதிலும், இந்த பரிந்துரையை ஏற்று நடைமுறைப்படுத்தாமல் கடந்த 30 மாதங்களாக மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது. இந்த நியாயமான கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்டமாக வரும் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.” என்றார்.

இதனிடையே, இன்று நடைபெற உள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை நாளாகும். இடைப்பட்ட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் வழக்கமான விடுமுறை நாள்கள் என்பதால், இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிச் சேவைகள் முற்றிலும் இயங்காது என ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால், பணப் பரிவர்த்தனை மற்றும் காசோலை வழிகாட்டல் போன்ற சேவைகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
