ஊழலை ஒழிக்காமல் நாடு முன்னேறாது; முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேட்டி

கோவை: ‘ஊழலை ஒழிக்காமல் எந்த ஒரு நாடும் முன்னேற முடியாது’ என, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் கூறினார்.

கோவையில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில், ‘ஊழிக்கூத்தாடும் ஊழலிலிருந்து தாய் நாட்டைக் காப்போம்’ என்ற தலைப்பில், ஒரு நாள் கருத்தரங்கு, பாரதியார் பல்கலை அரங்கத்தில் நடந்தது. ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் ஆலோசகர் முத்துச்சாமி தலைமை வகித்தார். பொருளாளர் கந்தசாமி வரவேற்புரையாற்றினார்.

இக்கருத்தரங்கில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, மாணவர்கள், நேர்மையான அரசு அலுவலர்கள், ஊழல்களுக்கு எதிராக புகார் அளித்த போராளிகளுக்கு, நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினர். தொடர்ந்து, பட்டி மன்றம் நடந்தது.

இக்கருத்தரங்கில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பேசுகையில், ”ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான், முதல்வராக விஜயை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஊழலை ஒழிக்க முதல்வர் விஜய் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்,” என்றார்.

முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் நிருபர்களிடம் கூறுகையில்,ஊழலை வைத்துக்கொண்டு எந்த ஒரு நாடும் முன்னேற முடியாது. தமிழக முதல்வரே, ஊழலை ஒழிப்பேன், பொது சொத்துக்களை தொட மாட்டேன், தொடவும் விடமாட்டேன் என்ற அறிவிப்பு பலமானது. அது, அரசு துறைகளில் கீழ் மட்டங்களில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

திருச்சி கிழக்கு என் இலக்கு அல்ல. தேர்தலை தாண்டி, இந்த சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. சட்டமன்றத்தில், இரு கட்சிகளும் வாய் சண்டை போடுவதாக ஒரு தோற்றத்தை மக்களிடம் காட்டுகிறது. ஆரோக்கியமானதாக, மக்கள் நலம் சார்ந்த விவாதங்களாக இருந்தால் நன்றாக இருக்கும், என்றார்.

Source link