திருச்சி: தவெக வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுக கட்சிகள் தவெக கூட்டணியில் இணைந்துள்ளன. இதனால் அவர்களுக்கும் திமுகவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மீது திமுக கடும் விமர்சனம் செய்கிறது. இந்நிலையில் தன் மீதான விமர்சனத்துக்கு திமுகவினர் மற்றும் ஸ்டாலின் குறித்து துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.
திருச்சியில் மதிமுக எம்பி துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “என்னுடைய எம்பி பதவி திமுகவினர் போட்ட பிச்சை பிச்சை என்று கூறி வருகிறார்கள். திமுகவினரை நான் இன்றைக்கும் மதிக்கிறேன். அந்த கட்சிக்காக உழைத்த பல தலைவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். வாழ்நாள் முழுவதும் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த தொண்டர்கள் இதே திருச்சி, புதுக்கோட்டை பகுதியில் இருக்கிறார்கள். அவர்கள் மீது நாங்கள் மரியாதை வைத்திருக்கிறோம்.
தலைவர் வைகோ மீது அவர்களும் மரியாதை வைத்திருக்கிறார்கள். ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் கூட்டணி கட்சிகளின் உழைப்பால், மக்களிடம் ஆதரவு பெற்று வெற்றி பெறுகிறோம். இது யாரும் போடும் பிச்சையல்ல. இவர்கள் என்ன மன்னர்களா. எங்களுக்கு பிச்சை போடுவதற்கு இவர்கள் சக்கரவர்த்தியா. 20க்கும் மேற்பட்ட இயக்கங்கள் சேர்ந்து கூட்டணி அமைத்து எல்லாரும் உழைத்தனர். அதில் திமுகவின் பங்களிப்பு பிரதானமானது. அதை மறுக்கவில்லை. ஓட்டு போடுவது மக்கள் தான்.
அதை வைத்துதான் வெற்றி பெறுகிறோம். இவர்கள் போடும் பிச்சை எல்லாம் கிடையாது. வருகின்ற தேர்தல்களில் அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை பார்ப்போமே. பிச்சையா இல்லையா என்பது தெரிந்துவிடும். மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் தான் பிச்சை போடுவார்கள். இதெல்லாம் தவறான கருத்து. இது ஜனநாயகத்துக்கும், சமத்துவத்துக்கும் எதிரானது.
திமுக உள்பட கூட்டணி கட்சிகள் ஓட்டு கேட்டதற்கு மக்கள் எங்களுக்கு பிச்சை போட்டனர். ஆனால் கொளத்தூரில் திமுக தலைவருக்கு அந்த பிச்சையை கூட போடவில்லையே. பண்ணையார் அரசியல் செய்கிறார்கள். இந்த பண்ணையார் அரசியல் கூடாது என்பதற்காக தான் அண்ணா மாற்றத்தை கொண்டு வந்தார். எந்த அண்ணாவால் சமத்துவம், மறுமலர்ச்சி கொண்டு வரப்பட்டதோ, அதே திராவிட இயக்கங்களில் பண்ணையார் அரசியல் வந்துவிட்டது.
அண்ணா கொண்டு வந்த சமத்துவத்தால் எளியவர்கள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆனார்கள். இப்போது சாமானியர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை. என்ன சாதி, எவ்வளவு செலவு செய்ய முடியும் என்று பார்த்து வேட்பாளர் தேர்வு செய்யப்படுகிறார். இதுதான் நடக்கிறது. இது அனைவருக்கும் தெரியும். இதற்கெல்லாம் முதலமைச்சர் விஜய் மாற்றம் செய்தார். லஞ்சம், ஊழலற்ற நிர்வாகம் செய்து வருகிறார். பிச்சை வார்த்தை எல்லாம் நிறுத்துங்கள்.
நாகரிகத்தை முதலில் அவரின் கட்சிக்காரர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும். இணையத்தில் நாய்களை வைத்து அசிங்கமாக பதிவு போடுகிறார்கள். ஒரு எல்லை இருக்கிறது. அடக்கி வாசிங்கள். இவர்களுக்கு இந்த தண்டனை போதாது. வருகின்ற இடைத்தேர்தலில் பெரிய தண்டனை கொடுப்பார்கள். திருமாவளவன் அண்ணன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. கூட்டணி கட்சிகளை உடைத்தது திமுக தான்” என்றார்.
