முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான 98 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு மத்திய அரசு சில விளக்கங்களைக் கேட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி விளக்கமளித்து பொதுத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையைப் பரிசீலித்த நீதிபதி, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி முதல் இந்த விவகாரம் பொதுத்துறை செயலாளரிடம் நிலுவையில் உள்ளதையும், அதுகுறித்து பொதுத்துறை தரப்பில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படாததையும் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, கடந்த ஐந்து மாதங்களாக கோப்புகளை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்து, அப்போது பொதுத்துறை செயலாளராகப் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ள ஐஏஎஸ் அதிகாரி ரீட்டா ஹரிஷ் தாக்கர் காணொலிக் காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், தற்போதைய பொதுத்துறை செயலாளரும் இது தொடர்பாக விளக்கமளித்து மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் சட்டமன்றத் தேர்தல் அல்லது ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி, முன்னாள் அமைச்சருக்கு எதிரான இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க அனைவரும் முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என கடும் கண்டனம் தெரிவித்தார். உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்த போதிலும் கோப்புகள் முடங்கி உள்ளதாகவும், வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
