ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை: இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்களை தேடுகிறது பிசிசிஐ

இந்திய சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் உள்ளார். இவரது விருப்பத்தின் பேரில் துணை பயிற்சியாளராக ரியான் டென் டோசேட் (Ryan ten Doeschate), பீல்டிங் பயிற்சியாளராக டி. திலிப் ஆகியோரை பிசிசிஐ நியமித்தது.

இவர்களது ஒப்பந்தக் காலம் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடருடன் முடிவடைந்தது. இவர்களது ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்ற பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பிசிசிஐ செயலாளர் சைகியா

இதை பிசிசிஐ செயலாளர் சைகியா உறுதிப்படுத்தியுள்ளார். ரியான் டென் டோசேட் 2024-ம் ஆண்டு இலங்கை தொடரின்பொது இந்திய அணியின் துணை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். பிசிசிஐ அவருடன் இரண்டு வருட ஒப்பந்தம் போட்டிருந்தது. தற்போது ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை.

நெதர்லாந்தை சேர்ந்த ரியான் டென் டோசேட், இந்திய அணியின் துணை பயிற்சியாளர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை எனத் தெரிகிறது. சொந்த நாட்டை விட்டு நீண்ட காலத்திற்கு வெளியே இருக்க வேண்டும் என்பதால் தற்போது ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தார். அதன்பின் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதனால் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரியான் டென் டோசேட் குடும்பம் லண்டனில் உள்ளது. ஐ.பி.எல். பயிற்சியாளராக இருந்தால், டிராவல் பயணம் குறையும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும் என எதிர்பார்க்கிறார்.

சுபதீப் கோஷ்

கடந்த வருடம் டி. திலிப்பிற்கு கூடுதலாக ஒரு வருடம் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. தற்போது அவரும் வெளியேறுகிறார். அடுத்த மாதம் மத்தியில் இந்தியா இலங்கை சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் உடனடியாக பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

பிசிசிஐ இரண்டு மூன்று பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த பீல்டிங் கோச் பதவிக்கு சுபதீப் கோஷ் முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் நியமனம் செய்யப்பட்டால் இலங்கை தொடரின்போது அணியுடன் இணைவார்.

Source link