கடவுள் இருக்கான் குமாரு.. லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டாய் வந்த காவிரி! 12,000 கன அடி நீர் திறப்பு!

சேலம்: காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் வரும் நிலையில் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியில் இருந்து 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 45 நாட்களுக்கு நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்தால் கூடுதல் நீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு 100 அடிக்கு மேல் இருக்கும்போது, காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பது வழக்கம். வழக்கமாக சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படும்.

இந்த நிலையில், நடப்பாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கான காவிரி நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனிடையே, செப்டம்பர் 1-ஆம் தேதியான இன்று தமிழக முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 45 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணையில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 3000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அன்று மாலையே நீர்வரத்து அதிகரித்ததால் நீர் திறப்பு 4000 கனடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து இரவில் 7000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஐந்து நாட்களாக காவேரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்தை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை முதல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 10000 கன அடியிலிருந்து 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது.

இன்று காலையில் மேட்டூர் அணைக்கு 5,227 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்த நிலையில் மாலையில் அது 7,598 கனடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் அதிகரித்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.39 அடியாக உள்ளது. அணையில் தற்போது 50.83 டி.எம்.சி. அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் நீர் 7,598 கன அடியாகவும், காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 12,000 கன அடியாகவும் உள்ளது. மேலும், கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.