சிறையில் ஆபாச வீடியோ பார்த்த 'மாஜி' பிரதமர் பேரன்

பெங்களூரு: கர்நாடகாவில், பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனதா தள நிறுவனரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவிடம் கைப்பற்றப்பட்ட, ‘பென் டிரைவில்’ 140க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

ஹாசன் தொகுதி ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேண்ணா, 35. பலாத்கார வழக்குகளில் கைது செய்யப்பட்ட இவருக்கு, ஒரு வழக்கில், சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ஆக., 11ல் சிறையில், மாநில குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், பிரஜ்வல் அடைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து மொபைல் போன், ‘பென் டிரைவ்’ கண்டெடுக்கப்பட்டன. அவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அவற்றின் முடிவுகள் வெளியாகின.

பிரஜ்வலிடம் கைப்பற்றப்பட்ட பென் டிரைவில், 140க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தன. மொபைல் போனில் ஆபாச வெப் சீரிஸ் உள்ளிட்ட, 173 கோப்புகள் இருந்தன. மேலும், அவரது மொபைல் போனிலிருந்து பெண் ஒருவருக்கு, ‘வாட்ஸாப்’பில் வீடியோ கால் செய்யப்பட்டுள்ளது. தன் உறவினர்களையும் அவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என, தெரிய வந்துள்ளது.

சிறையில் அவருக்கு எப்படி மொபைல் போன் கிடைத்து என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அது போல, பென் டிரைவில் சிக்கிய ஆபாச வீடியோக்கள் குறித்து விசாரிக்க, எஸ்.ஐ.டி.,யை அணுக போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

9 பேர் கைது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் மூன்று வெவ்வேறு ரெய்டுகளில், மொபைல் போன், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், மூன்று சிறை வார்டன்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இடைத்தரகர்கள் நவீன் குமார், மஞ்சுநாத், பிரகாஷ், சித்திக், முகமது டவுசிப் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், சிறை வார்டன் மஹாவீர் மூலம் மொபைல் போன்களும், ‘சிம்’ கார்டுகளும் கடத்தியது தெரிய வந்தது. ராகுல் என்ற போலி பெயரில், மொத்தம், 12 மொபைல் போன்கள் வாங்கிய ஒருவர், அதை கைதிகளுக்கு விற்றுள்ளார். அதன்படி, பரத் என்கிற புவனை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு இந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். பரப்பன அக்ரஹாரா சிறை தலைமை வார்டன் விஜய்குமாருக்கு, மொபைல் போன் விற்பனையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஒன்பதாவது நபராக விஜய்குமார் கைது செய்யப்பட்டார்.

Source link