சென்னை: டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி சான்றிதழ்களை பொதுமக்களே செப்.12 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டசபையில் செப்.2ம் தேதி விதி எண் 110ன் கீழ் பேசிய முதல்வர் விஜய், டிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி நாளை (செப்.12) முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருவதாக தமிழக அரசு அரசாணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இந்த புதிய முறையின் படி புதிய வாகனம் வாங்குவோம், அதற்கான பதிவை முடித்தவுடன் டிஜிட்டல் பதிவு சான்றிதழை இணையம் வழியாக நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு முடிந்த அன்றைய தினமே, டிரைவிங் லைசென்ஸ் டிஜிட்டல் முறையில் தரப்படும். டிஜிட்டல் ஆவணங்களில் உள்ள க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வழியாக அரசு அலுவலகங்கள், அதிகாரப்பூர்வ அமைப்புகள் மின்னணு முறையில் ஆவணங்களை மிகவும் எளிதாக சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இந்த டிஜிட்டல் சான்றிதழ்களை ஓராண்டுக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். அனைத்து டிஜிட்டல் ஆவணங்களிலும் ஒரு க்யூஆர் குறியீடு இடம்பெற்று இருக்கும். அதை பயன்படுத்தி அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளலாம்.
