துரை வைகோ மிசா பற்றி சொன்னதெல்லாம் உண்மையா? லிஸ்ட் போட்டு விளாசிய போஸ் வெங்கட்!

சென்னை: மிசா தொடர்பாக மதிமுக எம்.பி வைகோ தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், திமுகவைச் சேர்ந்த போஸ் வெங்கட், துரை வைகோவை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை ஆற்றினார். அப்போது அவர், கடந்த கால திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டுத் திமுகவினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மிசா பற்றியும் பேசினார்.

முதல்வர் விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், மிசா காலத்தில் தனக்கு நடந்த அடக்குமுறைகளைப் பற்றி பேசியிருந்தார்.

இதையடுத்து, மதிமுக முதன்மைச் செயலாளரும் எம்.பியுமான துரை வைகோ பேசுகையில், “ஸ்டாலின் மிசா காலத்தில் அரசியல் காரணத்திகாக தான் கைதானார் என்று சொன்னால் 100% இல்லை. மிசா காலத்தில் அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா என்பது கேள்விக்குறிதான். மிசா சட்டத்தில் அரசியல் காரணங்கள் மட்டுமின்றி பிற காரணங்களுக்காகவும் பலர் கைது செய்யப்பட்டனர். மிசாவின்போது ஸ்டாலின் கைதானது உண்மை. ஆனால் முழுமையான அரசியல் காரணத்துக்காக இல்லை. மிசா காலத்தில் திமுகவில் முதல் கைதும் வைகோதான். கடைசி விடுதலையும் வைகோதான். அரசியல் நாகரிகம் கருதி இந்த விவகாரத்தில் நான் இதற்கு மேல் பேச விரும்பவில்லை.” என்றார்.

இந்நிலையில், நடிகரும், இயக்குநரும், திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணைத் தலைவருமான போஸ் வெங்கட் தமது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வைகோ தான் முதலில் சிறை சென்று இறுதியாக விடுதலையானார் என்று வைகோ மகன் துரை கூறியிருக்கிறார். அவருக்கு முதலில் மிசா என்று பெயர் வைத்ததாகவும் அதனால் அவர் அந்த பெயருக்குரியவர் என்றும் உரிமை கொண்டாடியுள்ளார். சரி இருக்கட்டும், துரை வைகோ (எ) மிசா சொல்வது உண்மையா?

📌துரை தற்போது மக்களவை உறுப்பினர். பாராளுமன்ற இணையத்தளத்தில் இருக்கிற துரை பற்றிய தகவல் தவறாக இருக்க வாய்ப்பில்லை. பாராளுமன்ற ஆவணங்கள் படி துரை பிறந்தநாள் 2 ஏப்ரல், 1972.

📌மிசா சட்டத்தை அவசரநிலையாக குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி வழி இந்திரா காந்தி ஆட்சி பிரகடனம் செய்த நாள் 26 ஜூன் 1975.
மேலுள்ள இரண்டு அவணங்கள் படி கணக்கிட்டால் அப்போது துரைக்கு மூன்று வயது. மூன்று வயது வரை பெயரில்லாமல் பிறப்பை பதிவாக்காமல் வைத்திருக்கவும் வாய்ப்பில்லை.

📌பாராளுமன்றம் வெளியிட்ட உறுப்பினர்கள் குறிப்பேடு வைகோ திருமணம் நடைபெற்ற நாள் 14 ஜூன் 1971 என்று பதிவு செய்துள்ளது. ஆவணங்களில் உள்ள இத்தகவல் துரையின் பிறந்தநாள் தகவலோடு பொருந்துகிறது. ஆகவே ஆவணங்களில் உள்ள தகவல் பிழையாக இருக்க வாய்ப்பில்லை.

📌மிசா அவசரகால பிரகடனம் நடைமுறைக்கு வந்த அறிவிப்பிற்கு முன்னரே பிறந்தவர் துரை வைகோ. அந்த அறிவிப்பிற்கு முன்னர் மிசா சட்டம் பாராளுமன்றத்தில் 2 ஜூலை, 1971 அன்று இயற்றப்பட்டது. வைகோ திருமணம் நடைபெற்ற இரண்டு கிழமைகளுக்குப் பிறகு அது நடைபெற்றது.

📌திமுக ஆட்சி 31 சனவரி, 1976ல் கலைக்கப்பட்டது. அதையெட்டி பலர் மிசாவில் கைது செய்யப்பட்டனர். வைகோ 1 பிப்ரவரி, 1976ல் கைதுசெய்யப்பட்டார். பிப்ரவரி 2, 1977ல் அவர் விடுதலையானார். வைகோ பற்றிய இத்தகவல் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய ஆவணத்தில் பதிவாகியுள்ளன.

📌மிசாவில் இறுதியாக விடுதலையானவர்கள் 21 மார்ச், 1977ல் வெளிவந்தனர். அதில் மு.க.ஸ்டாலினும் ஒருவர். ஆகவே துரை வைகோ மிசாவைப் பற்றி பேசியவை பொய்யானவை அல்லது திமுக/ மு.க.ஸ்டாலின் மீது காழ்ப்பில் இட்டுக்கட்டி பேசிய பொய்கள். வைகோவின் வீழ்ச்சி மகனது வாய்பேச்சில் இருக்கிறது. தற்போதைய அரசியல் எவ்வளவு குரூரமான பொய்களோடு சதுரங்க ஆட்டம் ஆடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.” எனத் தெரிவித்துள்ளார்.