பெங்களூரு: ‘பாரத ரத்னா’ விருது பெற்ற பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவின் பெயரில் எழுத்துப் பிழை இருப்பதாக கூறி, பெங்களூரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், அதை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது.
அறிவியல் துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக நாட்டின் மிக உயரிய, ‘பாரத ரத்னா’ விருது பெற்றவர் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ், 92. கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர்.
கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து முடிந்துள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஒரு கோடி வாக்காளர்கள் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரம் சட்டசபை தொகுதியில், வாக்காளராக உள்ள பேராசிரியர் சி.என்.ஆர்.ராவின் பெயரில் முரண்பாடு இருப்பதாக கூறி, அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்த செய்தியை மறுத்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 2002 பட்டியலில் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் பெயர், ‘ராமா’ என பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது, ‘புரொப். சி.என். ராவ் எம்.,’ என்ற பெயரில் இருந்தது. முரண்பாடு காணப்பட்டாலும் மதிப்புமிக்க நபர் என்ற அடிப்படையில், அவரது பெயரை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கும்படி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பரிந்துரை செய்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
