உலக அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் போர்ச் சூழல்களுக்கு மத்தியில், இந்தியாவின் வளர்ச்சி வேகத்தைத் தக்கவைக்க சுதேசிப் பொருட்களும் சுயசார்பும் மிக அவசியம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
ஏனெனில் இறக்குமதிச் செலவைக் குறைத்து, நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை (CAD) கட்டுப்படுத்துவதுதான் ஒரு நாட்டின் ஜிடிபி (GDP) வளர்ச்சியை நிலையானதாக மாற்றும்.
பிரதமர் மோடி கூறும் ‘தற்சார்பு இந்தியா’ என்பது வெறும் அரசியல் கோஷம் அல்ல; அது நாட்டின் அந்நியச் செலவாணியைப் பாதுகாக்கும் மிகப்பெரிய மந்திரச் சொல்லாகும். நாம் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கமும் நமது ரூபாயின் மதிப்பைக் குறைத்து, டாலரின் கரங்களை வலுப்படுத்துகிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே ‘தேவையின்றி தங்கம் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள்’ எனப் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இதற்கிடையே இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சி கண்ட போதும், வெளிநாட்டுப் பயணங்கள், வெளிநாடுகளில் திருமணங்கள் மற்றும் தேவையற்ற தங்கக் கொள்முதல் ஆகியவற்றைக் தவிர்க்குமாறு பிரதமர் மோடி ஏன் கூறுகிறார்? மேலும், பங்குச் சந்தை ஏன் தேக்க நிலையிலோ அல்லது சரிவிலோ உள்ளது? பொருளாதார நிபுணர்கள் யாராவது விளக்க முடியுமா? என்று ஒரு பயனர் ‘X’ தளத்தில் எழுப்பிய கேள்விக்கு ‘ஜோஹோ’ (Zoho) நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கமளித்துள்ளார்.
