ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள இச்சாபுரம் நகரைச் சேர்ந்தவர் ஆஷிஷ். இவரது மனைவி கீதாமாதுரி ராஜமகேந்திரவரத்தை சேர்ந்தவர். இவர்கள் வேலை நிமித்தமாக லண்டனில் குடியேறினர். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கீதாமாதுரிக்கு கடந்த மே 30ம் தேதி அன்று பெண் குழந்தை பிறந்தது.
தனது தாய்வழிப் பாட்டியின் சொந்த ஊரான ராஜமகேந்திரவரத்தில், அந்த பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், போதகராகப் பணியாற்றும் தனது தந்தையுடன் லண்டனுக்குப் பயணம் செய்வதற்காக, அக்குழந்தைக்குக் கடவுச்சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக, பிறந்த இரு தினங்களிலேயே (ஜூன் 1ம் தேதி) குழந்தைக்கு ’அகஸ்யா பிரின்ஸ்’ எனப் பெயர் சூட்டிப் பிறப்புச் சான்றிதழ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 2ம் தேதி அன்று அக்குழந்தைக்கு ஆதார் அட்டைக்காக விண்ணப்பம் செய்யப்பட்டது. இதையடுத்து, 4ம் தேதி குழந்தையின் ஆதார் அட்டைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அடுத்ததாக, 6ம் தேதி அகஸ்யா பிரின்ஸ் பெயரில் பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது. இதையடுத்து, 12ம் தேதி கடவுச்சீட்டுக்கு (பாஸ்போர்ட்) ஒப்புதல் அளிக்கப்பட்டது.
குழந்தை பிறந்து வெறும் 13 நாட்களில் வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ’அகஸ்யாபிரின்ஸ்’ மிக இளம் வயதில் கடவுச்சீட்டு பெற்றவர் என சர்வதேச சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலமாக, 19 நாள் குழந்தையின் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
