‘புதியவர்கள் கையில் அதே பழைய அவதூறுகள்; கலைஞர் மீதான அச்சம்’-தங்கம் தென்னரசு பதிலடி

3 நாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவை இன்று (07-09-26) கூடியது. சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். அப்போது முதல்வர் விஜய், திமுக குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடுமையாக விமர்சித்து ஆவேசமாகப் பேசினார். திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து முதல்வர் விஜய் பேசியதைத் தொடர்ந்து, அதற்கு பதில் அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஆனால் சபாநாயகர், பதில் அளிக்க அனுமதி அளிக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினார். இதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், ‘தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு, நாள்தோறும் வெளியாகும் கொலை மற்றும் குற்றச் செய்திகள் போதுமான சாட்சியாக இருக்கின்றன. மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிப்பதுதான் ஒரு அரசின் அடிப்படைக் கடமை. ஆனால், குற்றங்களைத் தடுப்பதற்கும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பதிலாக, எதிர்க்கட்சியைத் தாக்குவதற்கான வசனங்களைத் தயாரிப்பதிலேயே இந்த அரசும் முதலமைச்சரும் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது.

சட்டம்–ஒழுங்கு குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரத்தில், பழைய அவதூறுகளைத் தூசிதட்டி எடுப்பது, இன்றைய தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகத்தான் பார்க்கப்படுகிறது.தலைவர் கலைஞர்  வாழ்ந்த காலத்தில் அவர் மீது வீசப்பட்ட அதே பழைய அவதூறுகளை, இன்று அரசியலுக்கு வந்துள்ள புதியவர்களும் பயந்து கையில் எடுக்கிறார்கள் என்றால், கலைஞர் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் கழகத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் மிசா சிறைக்கொடுமையைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவர். ஜனநாயகம் என்றால் என்ன என்பதைத் தனது போராட்ட வரலாற்றால் நிரூபித்த இயக்கம் தி.மு.க. ஆனால், இன்று எதிர்க்கட்சித் தலைவர்  உதயநிதி எங்கே அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவருடன் நேரடியான விவாதத்தையே தவிர்க்கும் அளவுக்கு ஜனநாயகம் பாதாளத்திற்குப் போய் விட்டது” என தெரிவித்துள்ளார்.

Source link