மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: டி.எஸ்.பி., உட்பட 4 பேர் சிறையில் அடைப்பு

மதுரை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், டி.எஸ்.பி., உள்ளிட்ட நான்கு போலீசாரை காவலில் வைக்க, மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த கோவிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரிலிருந்த நகை திருடுபோனதாக திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக, அஜித்குமாரை, 2025 ஜூன் 27ல் தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். சி.பி.ஐ.,விசாரிக்கிறது.

போலீஸ்காரர்கள் ராஜா, ஆனந்த், சங்கரமணிகண்டன், பிரபு, கண்ணன், போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் கைதாகி, மதுரை மத்திய சிறையில் உள்ளனர். மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ., சிவக்குமார், ஏட்டு இளையராஜா கூடுதல் எதிரிகளாக சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டனர்.

மதுரை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி கே. தாமோதரன் நேற்று விசாரித்தார். ராஜா உள்ளிட்ட 10 பேரும் ஆஜராகினர். அவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.


சி.பி.ஐ., தரப்பு வழக்கறிஞர் விஜயன் வாதம்: சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ரமேஷ்குமார் தற்போது மானாமதுரை இன்ஸ்பெக்டர். சிவகுமார், இளையராஜா சிவகங்கை டவுன் போலீசில் பணிபுரிகின்றனர்.

சண்முகசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேரையும் காவலில் எடுக்காமல் நியாயமான, சுதந்திரமான விசாரணையை உறுதி செய்ய முடியாது. வழக்கு முடிவடையும் வரை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் சாட்சிகளை கலைக்கக்கூடும். ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு வாதிட்டார்.

குற்றச்சாட்டு

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சண்முகசுந்தரம், தனிப்படையை சட்டவிரோதமாக அமைத்துள்ளார். அவர்கள், அஜித்குமாரை சட்டவிரோதமாக காவலில் எடுப்பதற்கு ரமேஷ்குமார், சிவகுமார், இளையராஜா உதவி செய்துள்ளனர்.

அஜித்குமார் இறந்த பின், அவர் போலீஸ் காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது காயமடைந்ததில் இறந்ததாகக்கூறி, பொய் புகாரை கண்ணன் அளித்ததாக, சி.பி.ஐ., தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. கொலையை மறைக்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்ததாக, ரமேஷ்குமார் மீது குற்றச்சாட்டு உள்ளது.

சிவகுமார், இளையராஜா, திருப்புவனம் போலீசில் பொது நாட்குறிப்பு பதிவுகளை திருத்தியதாகவும், நிகிதா புகாரில், சிவகுமார் முன் தேதியிட்டு சி.எஸ்.ஆர்., பதிவை போலியாக உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சண்முகசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேரும் குற்றம் நடந்ததை மறைக்கும் நோக்கில், ஏற்கனவே ஆவணங்களில் பொய் பதிவுகளை உருவாக்க முயன்றுள்ளனர்.

அஜித்குமார் பெற்றோரிடம், உள்ளூர் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் உதவியுடன் டி.எஸ்.பி., சமரசம் ஏற்படுத்த முயன்றதாக சி.பி.ஐ., குற்றம் சாட்டியுள்ளது.

தங்கள் மொபைல் போன்களில் ஆதாரங்களை, 10 பேரும் அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. சண்முகசுந்தரம், ரமேஷ்குமார், சிவகுமார், இளையராஜா சார்பில் இதுவரை ஜாமின் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இவர்கள் வெளியே இருந்தால் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தவும், ஆதாரங்களை சீர்குலைக்கவும் வாய்ப்புள்ளது.

சண்முகசுந்தரம், ரமேஷ்குமார், சிவகுமார், இளையராஜாவை செப்., 16 வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார். அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Source link