தேனி மாவட்ட திமுக மற்றும் விசிக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.
அக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இது வெறும் தேர்தல் களம் மட்டும் அல்ல போர்க்களம். தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்கிற சொல்லைக் கேட்டால் நசுக்குகிற கூட்டம் உள்ளது.
நம்முடைய குரல்கள் நாடாளுமன்றத்தில் கேட்கக் கூடாது என்று முயற்சி செய்கிறார். தொகுதி மறுவரையறை மூலம் நமக்கு வர வேண்டிய தொகுதிகளைக் குறைத்து உள்ளார்கள்.
தமிழ்நாடு முழுக்க கருப்புக் கொடி கட்டி நமது எதிர்ப்பைக் காட்டியுள்ளோம். முதலமைச்சராகிய என்னுடைய எதிர்ப்பு தமிழக மக்களின் எதிர்ப்பு. தமிழர்களை அவமதிப்பது மட்டுமே நோக்கமாக வைத்து பேசுகிறார் நாடாளுமன்றச் சபாநாயகர் ஓம் பிர்லா. அவர்களுக்குத் தெளிவாகச் சொல்கிறேன். இந்த மண்ணில் சமத்துவம், சமூக நீதி பொதுவுடமை கருப்பு சிவப்பு நிற கொடிகள்தான் பறக்கும்.
திமுக இருக்கும் வரை காவிக் கொடி ஒருபோதும் இங்கே பறக்காது. தன்மானம் உள்ள தொண்டர்கள் இங்கே காவிக் கொடியைப் பறக்க விட மாட்டார்கள். தமிழ்நாடா டெல்லியா? இந்தப் போரில் பழனிசாமியின் அடிமை அதிமுக துரத்த பட வேண்டும்.

தொடர்ந்து தேனி மாவட்ட போடிநாயக்கனூர் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அறிமுகம் செய்தார்.
அப்போது பேசிய அவர், “விசுவாசம் என்று சொல்லுகிற அளவுக்கு ஜெயலலிதா நன்மதிப்பைப் பெற்றவர். உலக மகா துரோகியை உலகிற்கு அடையாளம் காட்டியவர் ஓபிஎஸ். தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்கிற, பாஜகவிற்கு வாக்கு கேட்கிறார் பழனிசாமி, தமிழ்நாட்டுக்குக் கெடுதல் செய்ய ஊழல்வாதிகளை மிரட்டி ஏற்பட்ட கூட்டணிதான் என்டிஏ கூட்டணி
தமிழ்நாட்டிற்குச் செய்துள்ள ஒரே திட்டம் சொல்லுங்கள் என மோடியிடம் கேட்டேன். பதில் வரவில்லை. தமிழ்நாட்டிற்குச் செய்த திட்டத்தைப் பட்டியலிடுங்கள் என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டேன் அதற்கும் பதில் இல்லை.
