விழுப்புரம்: '' அன்புமணி, அவரது குடும்பத்தினர் பொய்யர்கள். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டு இருந்த

விழுப்புரம்: ” அன்புமணி, அவரது குடும்பத்தினர் பொய்யர்கள். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டு இருந்த போது என்னை அவர்கள் வந்து பார்க்கவில்லை,” என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இரண்டு முறை மருத்துவமனையில் இருந்தேன். எனது கட்சியினர் அழுகின்றனர். நிறைய பேர் தேம்பி தேம்பி அழுதனர். ராமதாஸ் ஐயாவுக்கு இப்படி ஆகிவிட்டது. அவர்நலம் பெற வேண்டும். சுகமாக இருக்க வேண்டும் என பொது மக்கள் வேண்டிக் கொண்டனர்.

ஆனால், இந்த பொய்யர் குடும்பத்தை சேர்ந்த யாரும், அந்த பொய்யரோ, அந்த பொய்யரின் மனைவியோ, பொய்யரின் குழந்தைகளோ யாரும் வந்து பார்க்கவில்லை. இரண்டு முறை மருத்துவமனையில் இருக்கும்போது. போனில் கூட பேசவில்லை. எப்படி இருக்கிறேன் என கேட்கவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் அவரது அம்மாவை வந்து பார்த்தார்.

போன முறை உடல்நிலை சரியில்லாத போது, ஆஞ்சியோ செய்த போது தமிழகத்தில் இருக்கும் அனைத்து தலைவர்களும் வந்து பார்த்து நலம் விசாரித்தனர். ஆனால், இவர் , அவரது குடும்பத்தை சேர்ந்த யாரும் வந்து பார்க்கவில்லை.

அந்த பச்சோந்திகள், என்னை பற்றியும், ஜிகே மணியை பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் தாறுமாறாக பேசி வருகின்றனர். அவர்கள் அழுவார்கள். கண்ணீர் வடிப்பார்கள். கண்ணீர் வரவில்லை என்றால் யாருக்கும் தெரியாமல் கிளிசரின் போட்டு கொள்வார்கள்.

அதை பார்த்த பொது மக்கள், ‘ஐயோ இந்த புள்ளை இப்படி அழுகிறதே. 3 மாத குழந்தை வைத்து கொண்டு ஓட்டு கேட்கிறது. சரி ஓட்டு போட்டுவிடுவோம் ‘ என்று சொல்லும் அளவுக்கு நடிப்பு திறனில் தலைசிறந்தவர்கள். நடிப்பும், பொய் பேசுவதிலும் மிக சிறந்தவர்கள். கூசாமல் பொய் பேசுவார்கள்.

அரசியலில் அந்த காலத்தில் பொய் பேசுபவர்களை பற்றி சொல்வார்கள். அண்டப்புளுகு என சொல்வார்கள். அதற்கு பதில் சொல்வது ஆகாய புளுகு என சொல்வோம். இரண்டு கட்சிகளுக்கும் பதில் சொல்வது போன்று பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று முன்னோர் சொன்னர்.

இப்போது நான்காவதாக பொய், அன்புமணியின் பொய். மூட்டை மூட்டையாக பொய் வைத்துள்ளார். பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுவார். ஆனால், அதனை எல்லாம் மக்கள் புரிந்து கொண்டு விட்டனர். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Source link