ஸ்டாலின் பட்ட மிசா கொடுமை.. கண்கலங்கிய பிரியங்கா காந்தி.. ஆ.ராசாவிடம் கேட்டது என்ன தெரியுமா?

சென்னை: பெரிய நடிகராக இருப்பதோ, 750 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதோ, முதலமைச்சராக இருப்பதோ பெரிய விஷயமல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக முதலில் மனிதனாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் மானத்தையும், அரசியல் நாகரிகத்தையும் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்று திமுக முன்னாள் எம்.பி. ஆ.ராசா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவையில் இழிவுபடுத்தியதாக முதலமைச்சர் விஜய்க்கு எதிராக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

இதில் பேசிய முன்னாள் எம்.பி. ஆ.ராசா, “தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு மிகப்பெரிய வரலாறும், ஈடுஇணையற்ற அரசியல் நாகரிகமும் இருக்கிறது. சட்டமன்றத்தில் எத்தனையோ காரசாரமான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.. எம்ஜிஆர் ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சித் துறை அமைச்சரான குழந்தைவேலு, “செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞருக்கு 300 ஏக்கர் நிலம் இருக்கிறது “என்றார்..

உடனே எழுந்த கலைஞர், அந்த நிலம் இருப்பதை அமைச்சர் நிரூபித்துவிட்டால், நான் அரசியல் துறவறம் பூணுகிறேன், நிரூபிக்காவிட்டால் அமைச்சர் துறவறம் பூண்பாரா? என்று சவால் விடுத்தார். ஒரு வாரம் கழித்தும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாததால் அமைச்சர் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படி ஒரு நிலமே செங்கல்பட்டில் இல்லை என்பது உறுதியானது.

கலைஞருக்கு செங்கல்பட்டு 300 ஏக்கர் நிலம்

அப்போது எம்ஜிஆர் கலைஞரிடம் வந்து, “சின்னப் பையன் ஏதோ அறியாமல் பேசிவிட்டான், மன்னித்துவிட்டு அமைச்சராகத் தொடர அனுமதியுங்கள்” என்று அன்போடு கேட்டுக்கொண்டார். கலைஞரும் பெருந்தன்மையோடு அவரை மன்னித்து அமைச்சராகத் தொடர ஒப்புக்கொண்டார்.

ஆட்சியில் இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சியில் இருந்தபோதும் சரி, எத்தகைய காரசாரமான கேள்விகள் வந்தாலும் அவற்றுக்கு நாகரிகமாகவும் சுவையாகவும் பதிலளித்த பெருமை திராவிட இயக்கத்துக்கு உண்டு. ஆனால், இன்றைய அரசியல் சூழலில் அந்த அரசியல் நாகரிகத்தை சிலர் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது.

ஐஏஎஸ் அதிகாரிகள் செய்யும் துரோகம்

சட்டமன்ற கேலரியில் உட்கார்ந்திருக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், ஒரு முதலமைச்சர் அவையில் வரலாற்று உண்மைகளுக்கு மாறாகவும் அநாகரிகமாகவும் பேசும்போது, அது தவறு என்று எடுத்துச் சொல்லாமல் அமைதியாக இருக்கீங்களே? ஆட்சி மாறுபடும், அமைச்சர்கள் மாறுவார்கள், ஆனால் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற மாட்டீர்கள்.. இந்த தேசத்திற்கு அமைதியாகவே இருந்து துரோகம் செய்யாதீர்கள்..

மிசா காலத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்கொண்ட கொடுமைகளை யாரைலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 1976-ல் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது ஸ்டாலினுக்கு வயது 23 மட்டுமே. கல்யாணமாகி 3, 4 மாதங்களே ஆகியிருந்தது.. அப்போது மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மிசா ஸ்டாலின் ஜெயிலில்

சிறை அதிகாரிகளும் காவல்துறையினரும் அவரை கொடூரமாகத் தாக்கியதில் தாடையிலும் கைகளிலும் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட கிடந்தார். அவரை காப்பாற்ற முயன்று குறுக்கே வந்த சிட்டிபாபு என்ற தியாகி, காவல்துறையின் கொடூரமான தாக்குதலில் சிறையிலேயே தன் உயிரைத் துறந்தார்.

சிறையில் இருந்த மகனைப் பார்க்க கலைஞர் சென்றபோது, ஸ்டாலின் முழுக்கை சட்டை அணிந்திருந்ததையும், அவரது முகம் சிவந்து வாடியிருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

“தம்பி, போலீஸ் உன்னை அடித்ததா?”

“தம்பி, போலீஸ் உன்னை அடித்ததா?” என்று பெற்ற மனம் பதறக் கேட்டார். அதற்கு ஸ்டாலின், “அப்பா, எனக்கு ஏற்பட்ட காயங்களையும், எனக்கு விழுந்த அடிகளையும் விசாரிக்க நீங்கள் வரவேண்டாம். இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும்தான் அடி விழுந்திருக்கிறது. தயவுசெய்து இந்த தேசத்தைக் காப்பாற்றுங்கள்” என்றார்..

கலங்கிய பிரியங்கா காந்தி

இந்த சம்பவத்தை நாடாளுமன்றத்தில் 75-வது அரசியலமைப்புச் சட்ட விவாதத்தின்போது நான் பதிவு செய்தேன். உரையை முடித்துவிட்டு வெளியே வந்தபோது பிரியங்கா காந்தி என்னை அணுகி, “ஸ்டாலினுக்கு உண்மையிலேயே இப்படிப்பட்ட கொடூரம் நடந்ததா?” என்று கண்கள் கலங்க கேட்டார். இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலும், சர்க்காரியா கமிஷன் ஆவணங்களிலும் பதிவாகியுள்ள இந்த வரலாற்று உண்மைகளை சிலர் தங்களுடைய அரசியல் லாபத்துக்காக திரித்துப் பேசுவது கண்டிக்கத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையிலும், பொது வெளியிலும் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்குக்கூட பதிலளிக்க முடியாதவர்கள், தியாகத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள்.

முதலில் மனிதனாக இருங்கள்

காமராஜர் தேர்தலில் தோற்று சட்டமன்ற உறுப்பினராக இல்லாத காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் ஊட்டியில் ஓய்வெடுக்கச் சென்றார். அப்போது அரசு விருந்தினர் மாளிகையில் அவர் தங்குவதற்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் உடனடியாக அனுமதி அளித்து மரியாதை செய்தார். இதுதான் அரசியல் நாகரிகம்.

பெரிய நடிகராக இருப்பதோ, 750 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதோ, முதலமைச்சராக இருப்பதோ பெரிய விஷயமல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக முதலில் மனிதனாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் மானத்தையும், அரசியல் நாகரிகத்தையும் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றெல்லாம் காட்டமாக பேசினார்.