22 ஆண்டாக உறைந்திருந்த கரு முட்டை; 54 வயதில் தாய்மை!

ஏதென்ஸ்: சாலை விபத்தில் வாலிப மகனைப் பறிகொடுத்து கண்ணீரில் தவித்த 54 வயது பெண், 22 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட உறைந்த கரு முட்டை மூலம், அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

​கிரீஸ் நாட்டைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர், பல ஆண்டுகளுக்கு முன் கருத்தரிப்பு சிகிச்சை(ஐ.வி.எப்.,) மேற்கொண்டபோது உருவான சில கரு முட்டைகளை ஆய்வகத்தில் உறைநிலையில் பாதுகாத்து வைத்துதார். அதன்பின் பிறந்த அவரது மகன், சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

​வாலிப வயதை எட்டிய ஒரே மகனை இழந்து தவித்து வந்த அந்தத் தாய், மகனின் இழப்பைத் தாங்க முடியாமல் கண்ணீரில் மூழ்கினார். அந்த சோகத்தின் மத்தியிலும், 22 ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனையில் பத்திரப்படுத்தப்பட்ட உறைந்த கரு முட்டையை மீண்டும் தன் கர்ப்பப்பையில் செலுத்தி குழந்தைப் பேறு பெற முடிவு செய்தார்.

​மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் துணையோடு அவருக்குப் பிரசவம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 54 வயதில் ஆரோக்கியமான பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்துள்ளார்.

​22 ஆண்டுகள் உறைநிலையில் வைக்கப்பட்டிருந்த கரு முட்டை மூலம் குழந்தை பிறந்தது மருத்துவ உலகிலேயே மிக அரிதான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

​’மகன் மறைந்தாலும், அவனது உடன்பிறப்பாக இந்த மகள் என் வாழ்வை மீண்டும் ஒளிரச் செய்திருக்கிறாள்,’ என ஆனந்தக் கண்ணீருடன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அந்தத் தாய்.

Source link