2500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை.. 6 சிலிண்டர்கள்.. சொன்னது என்னாச்சு? தவெகவை நறுக்னு கேட்ட கி.வீரமணி

சென்னை: 2500 மகளிர் உரிமைத் தொகை, 6 சிலிண்டர்கள் குறித்து, கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.. அத்துடன், தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் தேவையில்லாமல் திணிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த 2 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்யும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. ஆனால், மற்ற 5 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குகள் நிலுவையில் இருப்பதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. பொதுத்தேர்தல் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில், மீண்டும் தேர்தல் நடத்துவதால் மக்களின் வரிப்பணம்தான் செலவாகும் என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கி.வீரமணி கேள்வி

“இந்த இடைத்தேர்தல் உருவானதற்குப் பின்னால் அரசியல் கட்சி தாவலும் உள்ளது.. அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சில எம்.எல்.ஏ.க்கள், தங்களை வெற்றி பெற வைத்த கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதன்பிறகு தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து ஆளுங்கட்சியில் இணைந்தனர்.. கட்சி தாவல் சட்டப்படி நடவடிக்கை வரக்கூடிய சூழலில், ராஜினாமா மூலம் இடைத்தேர்தலுக்கு வழி ஏற்படுத்தப்பட்டது. இந்த 2 தொகுதிகளிலும் மீண்டும் கட்சி மாறி வந்தவர்களையே ஆளுங்கட்சி வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பது அரசியல் அறமா?

தாராபுரம், மதுராந்தகம்

மதுராந்தகம் தொகுதியில் வழக்குரைஞர் பரந்தாமனையும், தாராபுரம் தொகுதியில் வழக்குரைஞர் சுகன்யாவையும் தி.மு.க. வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வெற்றிபெறச் செய்வோம்..

சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது.. தமிழகத்தின் உரிமையை அடகு வைக்கும் செயல் இது..

பெண்களுக்கு உரிமைத்தொகை 2500

தற்போதைய ஆட்சி அமைந்து சுமார் 120 நாட்களாகும் நிலையில், மக்கள் நலத் திட்டங்கள் என்று சொல்லும் அளவுக்கு குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் இல்லை.. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், கொலை, பாலியல் வன்கொடுமை, ஆணவப் படுகொலை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பெண்களுக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது, அனைத்து வீடுகளுக்கும் 6 சிலிண்டர்கள் வழங்குவது போன்ற தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த இடைத்தேர்தல் ஆட்சியின் பெரும்பான்மையை மாற்றப்போவதில்லை, தற்போதைய ஆட்சியின் செயல்பாட்டை மக்கள் எடைபோடும் தேர்தலாக இருக்கும்.

கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் கருத்தில் கொண்டு, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்கள் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்” என்று மூத்த தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.