சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றி அவதூறு; திருமாவளவன் மீது போலீசில் ஹிந்து முன்னணி புகார்

பெரம்பலுார்: சேர, சோழ, பாண்டிய மன்னர்களை அவதுாறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது, அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டி போலீசில், ஹிந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் பழனிசாமி அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான திருமாவளவன், ‘எனக்கு எந்த மன்னர்கள் மீதும் மதிப்பு, மரியாதை கிடையாது. அந்த மன்னர்கள் காலத்தில் தான் தமிழகம் குட்டிச்சுவர் ஆனது.

சமஸ்கிருதமயமானது, ஹிந்துத்துவமயமானது’ என ஹிந்து கடவுள்களை பற்றியும், சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களை பற்றியும் அவதுாறாக பேசியுள்ளார்.

தமிழ் பேரரசர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் உள்ளிட்டோரையும் இழிவுபடுத்தியுள்ளார். மேலும், மொழிரீதியாக, மாநிலங்களுக்கு இடையே பிரிவினை உண்டாக்கும் வகையில், தொடர்ந்து அவதுாறாக பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அடுத்தகட்டமாக ஹிந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Source link