“இடைத்தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை” – தே.மு.தி.க. அறிவிப்பு!

தமிழகத்தில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (09.09.2026) முதல் தொடங்கியுள்ளது. அதன்படி வரும் 16ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல்  நடைபெற உள்ளது. 

இத்தகைய சூழலில் தான் திமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதில், “மதுராந்தகத்தில் ஐ.பரந்தாமனும், தாராபுரத்தில் எஸ். சுகன்யாவும்  போட்டியிடுவார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் 22வது தொடக்க நாள் மற்றும் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய வரும் 16ம் தேதி அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 16.09.2026  (புதன் கிழமை) காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அன்று கட்சியின் 22 ஆம் ஆண்டு துவக்க நாள் மற்றும் வர இருக்கும் இடைத்தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link