திரிஷா வீட்டிலிருந்து எட்டி பார்த்தால்.. சட்டசபை தெரியனும்? சர்ச்சை கிளப்பிய மாஜி சபாநாயகர் அப்பாவு!

சென்னை: நடிகை திரிஷா வீட்டில் இருந்து பார்த்தால் சட்டமன்றம் தெரிய வேண்டும் என்பதற்காக பட்டினப்பாக்கத்தில் சட்டமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், தமிழக சட்டமன்ற வரலாற்றில் சபாநாயகர் பிரபாகரை மாதிரி ஆணவப் போக்குடன் செயல்பட்டவர் எவரும் இல்லை என முன்னாள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையில் இன்று தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்” தமிழகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த காலத்தில் கட்டுப்பாடு இல்லாத மின்சாரம் இருந்தது.

அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டு இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த அரசு வந்தவுடன் மின்வெட்டு, மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதற்குப் பின்புலத்தில் மிகப்பெரிய விஷயம் உள்ளது. தமிழக மின்வாரியத்தில் செயற்கையான மின் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரணத்தைக் காட்டி தமிழ்நாடு மின்வாரியத்தை அதானி என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்காக செயற்கையாக மின் தட்டுப்பாடு உருவாகிறது. அதானி, மின் கட்டணத்தை உயர்த்தித் தாருங்கள் என கேட்டுள்ளார். 25 முதல் 50% மின் கட்டணத்தை உயர்த்தித் தாருங்கள், நான் வாங்கிக் கொள்கிறேன் என மின்வாரியத்திடம் கேட்டுள்ளார். அதற்கு பல்லாயிரம் கோடி கைமாறி உள்ளது. இந்தத் தகவல் எனக்கு வந்துள்ளது. இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.

குடிநீர் வினியோகமும் சேலத்தில் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தூய்மைப் பணியாளர்கள் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு, உங்களுக்கு விசில், எனக்கும் விசில் என ஏமாற்றி மக்களை போராட்டத்திற்கு தள்ளிவிட்டார்கள். அவர்களை அழைத்து விஜய் பேசுவதற்குக்கூட சம்மதிக்கவில்லை. தூய்மைப் பணிகள் கூட ஒப்பந்தம் தனியாருக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. தி.மு.க. ஆட்சியில் தனியாருக்கு தூய்மைப் பணி கொடுக்கப்பட்ட நிலையில் பிரச்சனை உருவானது.

அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. தமிழக முதலமைச்சர் லண்டனுக்கு முதலீடு ஈர்க்க சென்றுள்ளதாக அனைவரும் சொல்கிறார்கள். தொழில் முதலீடு ஈர்க்க சென்றால் ஒன்றிய அரசிடம் இந்தத் தகவல் சொல்லப்பட்டுதான் செல்ல வேண்டும். அரசு முறைப் பயணம் மேற்கொண்டால் செயலாளர்கள், இயக்குனர்கள், துறை அமைச்சர் அனைவரும் இணைந்துதான் செல்ல வேண்டும். வெளிநாட்டுக்குச் சென்று மத்திய அரசின் அனுமதியுடன் வர்த்தகத்துறை அதிகாரிகளுடன் இணைந்து கூட்டம் ஏற்பாடு செய்து, அதில் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

பல துறைகளில் இந்தியாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வரும்போது பொருளாதாரம் பூஜ்ஜியம் என்ற நிலையில் இருந்ததை 11.9 சதவீதமாக உயர்த்தியுள்ளார். இப்படி இருக்கும் போது தமிழக முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு எதற்குச் சென்றார் என்ற அரசு பூர்வ தகவல் எதுவும் சொல்லவில்லை. ஆனால் லண்டனில் நடிகை திரிஷா டீ சாப்பிட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார்.

திரிஷா வீட்டிலிருந்து பார்த்தால் புதிய சட்டமன்றம் தெரிய வேண்டும் என சொல்லிவிட்டாரோ என்னவோ, அதனால் பட்டினப்பாக்கத்தில் சட்டமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊழலே நடக்கவில்லை என தமிழக வெற்றிக் கழக அரசு பில்டப் செய்கிறது. தமிழகத்தில் எங்கும் லஞ்சமும், ஊழலும் நிறுத்தப்படவில்லை. தமிழகத்தில் தற்போது நடக்கும் மிக மோசமான ஆட்சியை விட உலகத்தில் வேறு எங்கும் வந்தது கிடையாது. ஊழல், லஞ்சம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது.

அனைத்து நிறுவனங்களும் தமிழகத்தில் தனியார்மயமாக்கும் திட்டம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க சபாநாயகர் ஜேசிடி பிராபகர் நேரம் வழங்க மறுக்கிறார். எதிர்க்கட்சிகளை சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்ற ஆதார் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் சபாநாயகருக்கு சிக்னல் கொடுத்து அறிவுறுத்துகின்றனர். சபாநாயகர் சுயமாக இயங்க முடியாத நிலை இந்த ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டமன்றத்தில் எனது நிர்வாகத்தில் ஒரு முறை கூட தலையிட்டது கிடையாது என தெரிவித்தார்.