காவிரியில் கலக்கும் பெங்களூரின் 47% கழிவுநீர்.. அதிர்ச்சி தகவல் சொன்ன கர்நாடகா அமைச்சர்

பெங்களூர்: பெங்களூரு மாநகரின் 47 சதவீத கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கிறது என்று கர்நாடக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீட்டு செய்வதில் பிரச்சனை உள்ளது. இதற்கிடையே தான் தமிழகத்தில் வரும் காவிரி நீரில் கர்நாடகா கழிவுநீரை கலப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இன்னும் சில நாட்களில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தான் வழக்கை எதிர்கொள்வது தொடர்பாக கர்நாடகா வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பெங்களூரு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு ராமலிங்க ரெட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

”காவிரியில்இருந்து கர்நாடகா சார்பில் பெங்களூருக்கு தினமும் 2,825 எம்எல்டி தண்ணீரை பெறப்படுகிறது. அதேவேளையில் தினமும் பெங்களூரில் இருந்து 2,580 எம்எல்டி கழிவுநீர் கிடைக்கிறது. இதில் 37 சுத்திரிகரிப்பு மையங்கள் வழியாக பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் 1,364.5 எம்எல்டி கழிவு நீரை சுத்தரிகரிக்கிறது.

ஆனால் மீதமுள்ள 1,215.5 எம்எல்டி கழிவுநீர் சுத்திரிக்கப்படவில்லை. இதனால் பெங்களூர் நகரில் உருவாகும் கழிவுநீரில் 47 சதவீதம் சுத்திரிக்கப்படாமல் காவிரியில் கலக்கிறது. கனகபுரா தாலுகாவில் உள்ள சங்கமத்தில் ஓடும் காவிரியில் இந்த கழிவுநீர் கலக்கிறது” என்றார்.

தமிழகத்துக்கு சங்கமம் வழியாக தான் காவிரி நீர் வருகிறது. அதுமட்டுமின்றி தென்பெண்ணை ஆற்றின் வழியாகவும் கெலவரபள்ளி அணைக்கு கழிவுநீர் செல்கிறது. இந்த கழிவுநீரை சுத்திரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, 43 சுத்திகரிப்பு மையங்களை புதிதாக உருவாக்க இருக்கிறோம்.

இதன்மூலம், 1,174 எம்எல்டி நீரை சுத்திகரிக்க இயலும். அதுமட்டுமின்றி தற்போது இருக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களின் கேப்பாசிட்டியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பசுமை தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள தர நிர்ணய அளவுடன் இந்த சுத்திகரிப்பு மையங்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பணிகள் அனைத்தையும் பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தால் 2029ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்” என்றார்.

தமிழகத்துக்கு வரும் காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் கர்நாடகா கழிவு நீரை கலப்பதாக தமிழக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் அதனை கர்நாடகாவை சேர்ந்தவர்கள் மறுத்து வந்த நிலையில் அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.