“ரைட்ல கை.. லெஃப்ட்ல இண்டிகேட்டர்.. ஸ்ட்ரைட்டா கிளம்பிய இடதுசாரிகள்”.. இடைத்தேர்தலில் 5 முனை போட்டி!

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2 தொகுதிகளிலும் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள் எந்தக் கூட்டணிக்கும் ஆதரவளிக்காமல் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளதால் இடைத்தேர்தல் களத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் திருச்சி கிழக்கு, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர், பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இதில், தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாத நிலையில், இவ்விரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இரு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை (செப்டம்பர் 9) தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) தொகுதியில் திமுக சார்பில் இ. பரந்தாமன், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) தொகுதியில் வழக்கறிஞர் எஸ். சுகன்யா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

தவெக சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே. மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலர் பி. சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே அதிமுக சார்பில் வென்று எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில் அவர்களே தவெக சார்பில் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் (தனி) தொகுதியில் அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மகளிரணி இணைச் செயலருமான முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத், தாராபுரம் (தனி) தொகுதியில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிரணி இணைச் செயலரும், மாவட்ட ஊராட்சிக் குழு 12-ஆவது வார்டு முன்னாள் உறுப்பினருமான கே. பானுமதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்தக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று சிபிஐ, சிபிஐஎம் ஆகிய கட்சிகளின் மாநில செயலாளர்கள் தங்கள் முடிவை அறிவித்துள்ளனர்.

இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடும் போட்டியிடும் என்றும், வேட்பாளர்கள் வரும் 15 ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை, இன்று மாலை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுராந்தகத்தில் ஏற்கெனவே போட்டியிட்டவருக்கு மீண்டும் வாய்ப்பு தரவுள்ளதாகவும், தாராபுரத்தில் புதிய நபருக்கு வாய்ப்பு வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.