கடந்த நான்கு நாட்களாக, அனுமதியின்றிச் சில நபர்கள் குளத்திற்குள் இறங்கி வலை விரித்து மீன் பிடிப்பதும் பறவைகளை வேட்டையாடுவதும் அதிகரித்துள்ளது. சிலர் குழுவாக இரவில் மது அருந்திவிட்டு மீன்கள், பறவைகளை வேட்டையாடி அங்கேயே சமைத்துச் சாப்பிடுகின்றனர்.குடிநீர் தொட்டியில் மீன்களை சுத்தப்படுத்துவதால், மக்கள் பயன்படுத்தும் குடிநீர் வீணடிக்கப்படுகிறது.
மீன்பிடித் தடையை மீறி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பவர்களால் நிறைய மீன்கள் சேற்றில் சிக்கி இறக்கின்றன. வலையில் பிடிபட்ட சீமை மீசை கெழுத்தி (African catfish) போன்ற உணவுக்குப் பயன்படாத மீன்களைக் கொன்று குளத்தில் வீசிச் செல்வதால் துர்நாற்றம், நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மீன்பிடித்தலுக்கு இடையூறாக இருக்கும் நீர்வாழ் பாம்புகள், பறவைகளைக் கொல்வதும் நிகழ்கின்றன.
இதன் காரணமாக, பல ஆண்டுகளாகக் குளத்தைப் பாதுகாத்துவந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளூர் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. ஆதலால், அரசு உடனடியாகத் தலையிட்டுச் சட்டம் ஒழுங்கு, சுற்றுச்சூழல் சீர்கேடுகளைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
