பின்னர் ‘‘ஒவ்வொரு 500 அடிக்கும் ஒரு இடத்தில் என்னுடைய திட்டங்கள் உள்ளன, எழுதி வைத்துக் கொள்ளுங்கள், மே-4-ம் தேதி சுந்தர்.சி ஷூட்டிங் சென்று விடுவார்’’ என சவால் விடுத்தார். பதிலுக்கு சுந்தர்.சி-யும், குஷ்புவும், பழனிவேல் தியாகராஜனை, ‘‘தலைக்கணம் கொண்டவர், அவரது அதிகார திமிரால்தான் நிதி அமைச்சர் பதவியில் இருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டார், நாங்கள் படிக்காதவர்கள்தான், ஆனால் எங்கள் வளர்ப்பு சரியாக இருப்பதால் எங்கள் அப்பா, அம்மா பெயரை காப்பாற்றுகிறோம், நாங்கள் இறக்குமதி வேட்பாளர் என்றால், கனிமொழி, மு.க.ஸ்டாலின், அவர்கள் சொந்த தொகுதியிலா போட்டியிடுகிறார்கள்? அவர்களை பார்த்து இந்த கேள்வியை கேட்பாரா? தோல்வி பீதியில் தரமில்லாமல் பேசுகிறார்’’ என்று விமர்சனம் செய்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பு, பிரச்சாரத்தில் மட்டுமல்லாது, சமூக வலைதளங்களிலும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். சுந்தர்.சி-க்கு ஆதரவாக மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பி.எம்.மன்னன், எஸ்ஸார் கோபி தலைமையில் அதிமுகவினரும், பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக திமுக தலைமை அமைத்த தேர்தல் பணிக்குழுவினரும் தேர்தல் களத்தில் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.
தவெக வேட்பாளர் மதார் பதூருதீன், நாம் தமிழர் வேட்பாளர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் மத்திய தொகுதியில் சத்தமில்லாமல் தங்கள் பாணியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்களும் இந்த தொகுதியில் கணிசமான வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால், பழனிவேல் தியாகராஜனுக்கும், சுந்தர்.சி-க்கும் இடையேதான் வெற்றிக்கான போட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
