நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா (திவ்யா) திருமணம் குறித்துப் பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் ரம்யா. கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து, இவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அதில் வெற்றிபெற்றார்.
இவர் சமீபத்தில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, அவரிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ”வாழ்க்கையில் திருமணம் என்பது அவ்வளவு முக்கியம் என நான் நினைக்கவில்லை. நமது அடையாளத்தைத் தீர்மானிப்பது திருமணம் அல்ல. திருமணம் இன்றியே நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும். நீங்கள் திருமண பந்தத்தில் இணையப் போகிறீர்களா? அல்லது மகிழ்ச்சியாக வாழப்போகிறீர்களா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
நான் திருமணத்திற்கு எதிரான நபர் அல்ல. பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தோழனாக இருக்கும் சரியான நபர் கிடைத்தால் திருமணம் என்பது அழகான ஒன்று தான். எனது வாழ்க்கையைப் பொறுத்தவரை எனக்கேற்ற சரியான துணை இன்னும் அமையவில்லை. நானும் தீவிரமாகத் தேடவில்லை. திருமணம் செய்யாமல் தனியாக வாழ்வது தனிமை அல்ல. அது ஒரு வகையான சுதந்திரம் மற்றும் நிம்மதியான வாழ்க்கை முறை” என்று தெரிவித்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
