காணாமல் போன இரண்டு மகன்களை மீட்பதற்காக தம்பதி பிச்சைக்காரர்களாக மாறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த தம்பதியினருக்கு 14 வயதில் ராகுல், 11 வயதில் அர்பித் என்ற இரு மகன்கள் உள்ளனர். வேலை தேடி குஜராத்தின் முந்த்ரா பகுதிக்குச் சென்ற இந்த தம்பதியினர், அங்கு தனது இரு மகன்களுடன் வசித்து வந்தனர். இந்த சூழலில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி, அந்த இரண்டு சிறுவர்களும் விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியேறினர். ஆனால் அவர்கள் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
பெற்றோர் அருகிலுள்ள பகுதிகளில் தேடியும், உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தொடர்புகொண்டும், காவல்துறையை அணுகியும் பார்த்தனர். ஆனால் சிறுவர்கள் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. குழந்தைகள் காணாமல் போன மூன்று மாதங்களுக்குப் பிறகு, தங்கள் மகன்களைப் பிச்சைக்காரர் கும்பல் ஏதேனும் கடத்திச் சென்றிருக்கலாம் என்று பெற்றோர் சந்தேகிக்கத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து, பெற்றோர் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு, தாங்களே பிச்சைக்காரர்கள் போல வேடமணிந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அவர்கள் பிச்சைக்காரர்களாக பயணம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தங்கள் மகன்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கும் முயற்சியில், அவர்கள் பல மாதங்களாகப் பல்வேறு தெருக்களிலும் இடங்களிலும் அலைந்து திரிந்ததாகக் கூறப்படுகிறது. இறுதியில் தங்கள் மூத்த மகன் ராகுலுக்குப் பிச்சைக்காரர் கும்பல் ஒன்றுடன் தொடர்பு இருந்ததற்கான தகவல் அவர்களுக்குக் கிடைத்தது.
அந்தத் தகவலைப் பின்தொடர்ந்து ராஜஸ்தானின் பிகானேர் பகுதிக்குச் சென்ற பெற்றோர், அங்கு ராகுலைக் கண்டுபிடித்தனர். இருப்பினும், இளைய மகன் அர்பித்தை தேடும் பணி தொடர்ந்துள்ளது. ராகுல் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 15 நாட்களுக்குப் பிறகு, அர்பித் மேற்கு வங்காளத்தின் ஹவுரா பகுதியில் இருப்பதாகப் பெற்றோருக்குத் தகவல் கிடைத்தது. பின்னர் அவர்கள் ஹவுராவுக்குச் சென்று, தங்கள் இளைய மகன் அர்பித்தையும் கண்டுபிடித்து மீட்டனர்.
