மயிலாடுதுறை: மயிலாடுதுறை தொகுதியை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள நிலையில், எந்தக் கட்சித் தலைவரும் இதுவரை இங்கு பிரச்சாரத்துக்கு வராததால், இப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. இதில், 1991-க்கு பிறகு இந்தத் தொகுதியை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இதுவரை பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கே தாரை வார்த்துள்ளன.
கடந்த 2016 தேர்தலின் போதுதான் திமுக, அதிமுக நேரடியாக போட்டியிட்டன. இதில், அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவாக வெற்றிபெற்றார். அதன்பிறகுதான் மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் வாங்கப்பட்டது. மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
